Wednesday, February 22, 2006

ரஜினியின் அடுத்த மூவ்

எல்லா பத்திரிக்கைகளும் ரஜினி இந்த தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்று யூகங்கள் வெளியிட ஆரம்பித்து விட்டன. எனக்கென்னவோ இந்த தேர்தலுக்கு ஓட்டு போடறத தவிர அவரு எதையும் பண்ண் மாட்டார்னு தோணுது (யாருக்கு போட்டார்னு சொல்லவும் மாட்டார்).அப்போ ரஜினி அரசியலுக்கு வரப்போறதில்லயா? அதான் இல்ல கண்டிப்பா அடுத்த தேர்தல்ல ரஜினிய எதிர்பாக்கலாம்.சரி ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி சொல்றேன்?

முதல்ல பாபாவுக்கு முன் ,பாபாவில், பாபாவுக்கு பின் அப்டின்னு இத பாப்போம் அதாவது பாபாவுக்கு முன்னே ரஜினியின் இமேஜ் அளவிட முடியாதது.கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்கன்னா பாட்ஷாவுக்கு முன்ன ஒரு ரெண்டு வருஷமாவே ரஜினி படங்கள் சுமாராவே ஓடிட்டிருந்தது... கோபப்பட வேண்டாம், 100 நாள் படங்கள் தான் ஆனாலும் சுமார் தான் நல்ல உதாரணம் உழைப்பாளி,அண்ணாமலை.அடுத்ததாவோ அதுக்கு முன்னாடியோ பாண்டியன் வந்தது (தேவர் மகனும் இந்த படமும் ஒண்ணா வந்தது ரஜினி, கமல் படங்கள் ஒண்ணா வந்து அதில கமல் படம் ஹிட் ஆனது இங்க மட்டும் தான்,மத்த எல்லா தடவையும் ரஜினி படங்கள் தான் ஹிட்).ஆனா பாட்ஷா இந்திய அளவில ரஜினிக்கு பேர் வாங்கி கொடுத்தது.அதுக்கப்புறம் (இன்னமும் அதிக) உயரம் போக ஆரம்பித்தார். ஜெயலலிதாவுடனான உரசலில் முதல் தடவையாக நேரடியாக அரசியலுக்கு வரவேண்டிய சூழ் நிலை.

அப்போது மட்டும் கட்சி ஆரம்பித்திருந்தால் ,முதல்வராகியிருக்க முடியும் என்று இப்போது வருத்தப்படும் ரசிகர்கள் உண்டு.ஆனால் அதை செய்யவில்லை. 'இன்னொரு முறை இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது' என்று பேட்டி மட்டும் தான் கொடுத்தார்.அந்த தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதற்கு ரஜினி முக்கிய காரணமானார். இது முதல் தவறு, ஆனாலும் தியரிடிகலாக ஸ்டடி ஆனார்.

அடுத்தது ‘முதல்வன்’ படத்தில் ஒப்புக்கொள்ளாமல் போனது.ரஜினிக்காகவே ஷங்கர் உருவாக்கிய படம் அது (அதன் இந்தி பதிப்பில் ஹீரோ பெயர் சிவாஜி ராவ் இதை வைத்து தான் பாலிவுட்டிலேயே விளம்பரம் செய்யப்பட்டது எப்படியும் அங்கு படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்).இப்போது பாபாவுக்கு வருவோம்,அதிக எதிர்பார்ப்பு ரஜினியின் கடைசி படம் என்கிற புரளி (ஒருவேளை ஹிட் ஆகியிருந்தால் நிஜமாகியிருக்கலாம்) இப்போது வரை ரஜினியின் இமேஜ் ஏறுமுகம் தான்.இந்த இடத்தில் கேசட் ரிலீஸ் இதுவரை இல்லாத வகையில் தியேட்டர் டோக்கன் கொடுத்து வித்தியாசமாக தரப்பட்டது.லேசாக நடு நிலையாளர்க்ள் மத்தியில் அதிருப்தி ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் ரஜினி இல்லை.பாடல் வெளியீட்டுக்குப் பிறகு ஒரு பாடலில் பெரியார் பற்றிய சர்ச்சை எழுந்தது இது தான் இங்கு வந்த முதல் பிரச்னை.சினிமாப்படங்கள் மீது கேஸ் போடும் வழக்கம் இங்கிருந்து தான் ஆரம்பமானது. வழக்கம் போல இதை அஹிம்சையாகவே ரஜினி சமாளித்தார் ஒரு பத்திரிக்கையில் அப்போது ரஜினி செயல்பட்ட விதத்தை இப்படி பாராட்டியிருந்தார்கள்,” தற்காலிகப் புகழுக்காக இதை செய்தவர்களுக்கு ரஜினி சரியாக பதிலடி தந்து விட்டார்.படத்திலிருந்து எடுப்பதாக சொல்லி பிரச்னையை முடித்து விட்டார்.ஆனால் ஆடியோ கேசட்டுகளில் ஏற்கனவே பதிந்ததை எப்படி மாற்ற முடியும் எதிர்ப்பவர்களால்?”.

மலேசிய கலை விழாவில் "அடுத்தது நான் போகப்போகிற பாதை ஒன்று இருக்கிறது.ஆனால் அது அரசியல் இல்லை" சற்று நிறுத்தி விட்டு "இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்" என்றார்.பயங்கர க்ளாப்ஸ் ஆனால் அரசியல் டெஸ்ட் ஆரம்பித்தது.

ராமதாஸ் ரஜினிக்கு ஒரு டெஸ்ட் ஆக வந்தார்.ஒருவேளை ரஜினியின் அமைதியாக இருப்போமே என்கிற குணத்தை வைத்து முடிவெடுத்தாரோ என்னமோ எதிர்த்தார்.எதிர்க்க வேண்டுமே என்கிற மாதிரி ஒரு வாதம் ‘புகை பிடித்து எதிர்கால சந்ததிக்கு தவறான வழி காட்டுகிறார்’ (இதை எதிர்த்து இவர்களே இன்னமும் சட்டம் கொண்டு வரவில்லை / முடியவில்லை,இது ஏன் சப்பையான வாதம் என்று வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம்) ஆனால் ராமதாஸ் ஜெயித்தார் மிக முக்கிய காரணம் பாபா படக்கதை.சும்மா விட்டிருந்தாலே அந்தப்படம் ஓடியிருக்காது, ஏதோ அவர்களது பிரச்சாரத்தில் தான் ஓடாமல் போனது என்கிற மாதிரி தங்கள் இமேஜை உயர்த்திக்கொண்டார்கள்.சரியாக ரஜினி குழம்பியிருந்த நேரத்தில் காவிரிப்பிரச்னையை கையில் எடுத்தார்கள்.பிரச்னையை விட ரஜினி நிலைப்பாடு என்ன என்பதே அந்த வருடப்பிரச்னையின் முக்கிய நோக்கம் (இப்போது வரை காவிரிப்பிரச்னை இருக்கிறது) ஆனால் அந்த வருடம் தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிதாக ஆரம்பித்தது.ரஜினி நெய்வேலிப்போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை.மொத்த தமிழகமும் வெறுப்படைகிற தர்மசங்கட சூழ்நிலை.முன்பு சொன்ன ரஜினியை ஆதரித்து பேசிய தினசரியே 'கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை' என்று விமர்சித்தது, கலைக்கப்படும் ரசிகர் மன்றங்களை படம் பிடித்துப்போட்டது. தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ரஜினி இங்கே ஜெயித்தார்.மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்தார்,பல கட்சித்தலைவர்கள், கட்சி சார் நடிகர்கள் எல்லோரும் பங்கேற்றார்கள். சில நாட்களில் 'ஜக்கு பாய்' அறிவிப்பு வெளியிட்டார்."இறைவா நண்பர்களிடமிருந்து காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்ற கேப்ஷன் பெரிதாகப்பேசப்பட்டது.தேர்தலில் அதிமுகவுக்கு சப்போர்ட் பண்ணினார்.அனைவரும் அறிந்த கடைசி தவறான முடிவு.வரலாற்றுத்தோல்வி. இப்போதுவரை தான் குழப்பங்கள்.சட்டென்று காட்சிகள் மாற்றினார்.பழைய குரூப்பை ஒதுக்கினார், முற்றிலும் எதிர்பாராத காம்பினேஷனில் 'சந்திரமுகி'. (டைட்டிலில் கூட ஹீரோயிஸம் இல்லை) சொன்னபடி மிகப்பெரிய வெற்றி.தான் வசூலில் இன்னமும் சூப்பர் ஸ்டார் தான் என்று இன்னொரு முறை நிரூபித்தார் (கூட கமல் படம் ஒன்று வந்தது அதன் பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்?).அடுத்த மூன்றாவது வாரங்களில் இரு முன்னணி வார இதழ்களில் தொடர் கட்டுரைகள் , பார்க்காத புகைப்படங்கள்.படம் 100 நாள் ஓடுமுன்பே அடுத்த படம் பற்றிய பேச்சு வர ஆரம்பித்தது.அதே போல 'சிவாஜி' அறிவிப்பு.இவைதான் இதுவரை நடந்தவை.சரி அடுத்து என்ன நிகழும்? உண்மையிலேயே சினிமா போதும் என விரும்பினால் சில பல நிகழ்ச்சிகளை ஏன் நடத்தினார்? நாளை சொல்கிறேன்

No comments: