Wednesday, February 15, 2006

கடுப்பு கனவு இம்சை இரவு

இரவு மணி 10:30
காத்து கருப்பு சீரியல் பார்த்தால் காலை லேட்டாகும். ‘சுர்ர்ர்’ ஆ.. ஏதோ கடித்து விட்டது, மேல் தொடையில் உடனடி தடிப்பு.பயமாத்தான் இருக்கு ம்ச்ச் காலைல பாத்துக்கலாம்.

11 மணி
தூங்க ஆரம்பிக்கிறேன்.ஒருவேளை ஸ்பைடர் மேன் படத்தில வர்ற மாதிரி சிலந்தி கடிச்சிருந்தா...அய்யா பஸ்ல போற தொல்லையே இல்ல செலவும் மிச்சம் ஆனா சீக்கிரம் வீடு மாறிடணும், இந்த பக்கம் தான் மாடியே இல்லயே அப்புறம் எங்கே தாவுறது?....தூங்கி விட்டேன்.

12:30

கைகளில் கொத்தாக வலி, தேய்த்து விடலாமென்றால் தூக்க முடியவில்லை...இரண்டு கைகளையுமே லேசாக அசைக்க முயற்சி செய்தேன் பூச்சிகள் விறுவிறுவென்று ஏறுவது போல இருந்தது...ஆபத்து லைட்டை போடு முழுதும் இருட்டு யாரையாவது கூப்பிடு “அம்மா... லைட்டப்போடு” பலனில்லை வலி சுர்ர்ரென்றது கத்த ஆரம்பித்தேன்... " ர்ர்ர் ர்ரா ஆ ஆஆ ஆஆஆஆஆ".இடையில் நண்பன் குரல்,”டேய் ஏன்டா கத்துற...வேஷ்டிய ஒழுங்கா கட்டுறா லைட்ட போட்றேன்”.சரேலென வெளிச்சம்....இது வீடில்லை ரூம்.கைகளில் வலி...? வலியில்லை கண்ட மேனிக்கு படுத்ததில் மரத்துப்போய் விட்டது.பக்கத்து வீட்டு கணவன் மனைவி கதவைத்தட்டினார்கள் நண்பன்,“ஹி ஹி ஒண்ணுமில்ல தூக்கத்தில உள்றிட்டான்”.மனைவி,”இப்படியா அதுக்கு கத்துவாங்க?” கணவன்,”ஏதாவது உருவம் ஜன்னல் வழியா பாத்தாப்லயா?” (அவருக்கு ரொம்ப நாளாகவே திருடர் சந்தேகம்)

காலை 5:45

“ நாதாரி நைட் வேற காத்து கருப்பு பாத்தேன்.இவன் கத்தின கத்துல நான் அரண்டுட்டேன்". நண்பனின் புலம்பலில் எழுந்தேன் அப்புறமென்ன கொஞ்சம் வழிந்து விட்டு எங்களுக்கு வந்த வித்தியாசமான கனவுகளைப்பற்றி பேசி விட்டு கிளம்பி விட்டேன்.சரி இதே போல உங்களுக்கு வந்த அல்லது பயமுறுத்திய கனவுகளைப்பற்றி கமென்ட்டில் பகிருங்களேன்.

No comments: