Friday, July 28, 2006

அனைவருக்கும் வணக்கம்

கோகுல் என்கிற (சில நாட்கள் காணாமல் போயிருந்த) தொல்லை திரும்பவும் வந்து விட்டது.தமிழ்மணத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது போல... வாழ்த்துக்கள்

நட்சத்திர வாரத்தில் எழுத முடியாது போய் விட்டது அதை விட முக்கியம் அதை சொல்லாமல் கூட விட்ட என்னுடைய அநாகரிகம்.நிர்வாகிகள் மன்னிக்கவும்.

இருப்பினும் என்னை மன்னித்து விட்டார்கள் நன்றிகள் பல. நிர்வாகவியல் (MBA) படிப்பில் சில பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் ஓரளவு செட்டிலாகி விட்டேன்.நாமக்கல் சிபியிடம் மட்டும் எழுத முடியாமைக்கு புலம்பினேன்...எதிர் முனை தொலைபேசியில் (ரொம்ப சந்தோஷத்துடன்...?!) படிப்பு தான் முக்கியம் என குறுந்தகவல்(SMS) அனுப்பினார்.


தினமும் கணிணி முன் உட்கார நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது, எனினும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாதமேனும் ஆகலாம் எனவே பூக்காடு மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.

நாளை முதல் மீண்டும் சந்திப்போம்...980980

Categories:

Friday, June 30, 2006

விஜயகாந்த் - நடிகர் சங்கத்தலைவர்?

விஜயகாந்த் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கை, நாசர் எதிர்ப்பு, அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள்...

என் கேள்வியெல்லாம் அவர் வென்றால் அது செல்லுமா? ஏற்கனவே ஜெயா பச்சன் இது போன்ற பதவி வகித்ததற்கு தானே ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கக்கூடாதென உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதிலும் பணம் வந்தால் மட்டுமல்ல புகழ் வந்தாலும் கூட அது ஆதாயம் தரும் பதவி தான் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்ட நிலையில் விஜயகாந்த் நிற்பது அர்த்தமற்றது இல்லையா?

அப்படியானால் விஜயகாந்த் எந்தப்பதவியை ராஜினாமா செய்வார்? எதை ராஜினாமா செய்தாலும் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே.

ஆனால் யாருமே இதுவரை இப்பிரச்னையை இக்கோணத்தில் எடுக்காததற்கு காரணம் இரு பக்கம் கூர்மையான கத்தி என்பது தான்.ஏற்கனவே அகில இந்திய அளவில் இப்பிரச்னை ஒரு சுற்று வந்து விட்ட நிலையில் தமிழகத்திலும் இப்படி ஆரம்பித்தால் ஒவ்வொரு கட்சியிலும் மற்ற கட்சிகள் ஆராய்ச்சியில் இறங்கி பலரை பதவியிறக்க இப்போதே ஆமையாக இயங்கும் நீதி மன்றங்களில் வழக்குகள் போட்டு இன்னும் கொஞ்சம் மந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம்.

அப்படி நிகழ்ந்தால் விஜயகாந்த்திற்கு புகழ் நிச்சயம் கிடைக்கும்,அரசியல் களமும் சூடாகும். பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி தான்.மக்கள் அதாவது நாம்... வேடிக்கை பார்க்க வேண்டியது தான் வழக்கம் போல.

Categories: ,

Sunday, June 25, 2006

சிக்குன் குனியாவால் ஸாரீஈஈஈஈஈ

சிலபல நாட்கள் தொல்லையில்லாமல் இருந்த நண்பர்களுக்கு வணக்கம்.சுமார் பத்து நாட்களாக சிக்குன் குனியா நாமக்கல் சேலம் பகுதிகளில் பாடாய் படுத்துவது அனைவரும் அறிந்ததே, இந்நேரம் பார்த்து எனக்கும் காய்ச்சல் வர எழுத இயலாமல் போய் விட்டது.முன்பே எழுத உட்கார்ந்தேன் அப்போது தான் தமிழ்மணம் விற்பனைக்கு என்கிற அதிர்ச்சி தகவலை பார்க்க நேரிட்டது.ஏனோ சோகம் மனம் கவ்வ எழுதும் மூட் போய் விட்டது.

அதுவும் நாமக்கல் சிபி போனில் தொடர்பு கொண்டு பேசிய அன்று தான் கடைசி நாள் எழுதியது என்று ஞாபகம்.அவருடன் பேசிய நிமிடங்கள் தான் செல்பேசியில் (ஒத்த பாலின மனிதருடன்) அதிக நேரம் பேசியவை, சுவாரசியமாக பேச்சு நீண்டது.தெரிந்தவர்களை தாண்டி இப்படி பேசுவது இப்படி அரிதாகவே நிகழ்கிறது.

ஆனால் வளர்சிதை மாற்றம் போட்டியில் தான் கலந்து கொள்ள முடியவில்லை,கவிதை எல்லாம் யோசித்து வைத்திருந்தேன்.ம்ச்ச்

இன்று முதல் வழக்கம் போல் தினமும் எழுத உறுதி தர இயலாது ஆயினும் Updates இருக்கும் ;)

Categories:

Wednesday, June 14, 2006

புட்பாலா கிரிக்கெட்டா

எங்க பாத்தாலும் புட்பால் பத்தியே பேச்சு,இன்னைக்கு பேப்பர்ல வயசான பாட்டி செத்துட்டதா டாக்டர்ஸ் சொன்னதுக்கப்புறம் திடீர்னு பாட்டி எந்திரிச்சு "ஜெர்மனி இன்னைக்கு விளையாடுதா?"ன்னு கேட்டிருக்கு.அதில்லாம இந்த தடவ ஜெர்மனி உலகக்கோப்பை வாங்கறத பாக்க தான் அவங்க உயிரோட இருக்கறதா பேட்டி வேற.

நமக்கு புட்பால் பாய்ஸ் ஸ்கூல்ல அறிமுகமாச்சு.நூறு பசங்கள பி.டி பீரியட்ல ஒரே ஒரு புட்பால குடுத்து ஓட்றா ராசான்னு அனுப்பிடுவாங்க கோச்சிங்லாம் ஒண்ணுமில்ல,பெப்பென்னு ஒரு கூட்டம் பந்த சுத்தி ஓடும், இன்னும் கொஞ்சம் குழுக்கள் அங்கங்க நின்னு பேசிக்கிட்டிருக்கும் அப்டியே பந்து வந்ததும் படார்னு கேம்க்குள்ள இறங்கி நாலு தள்ளு தள்ளிட்டு திரும்ப வந்து எங்கனயாச்சும் நின்னு பேச ஆரம்பிக்கும்.அது கோல்பாஸ்ட் இல்ல கோல் போஸ்ட்னு இப்ப தான் தெரியும் (ஆமா தானே?)அதில்லாம கிரிக்கெட் விளையாடக்கூடாது புட்பால் தான் விளையாடணும்னு ரூல் போட்டதும் தான் கொள்ள பேரு கிரிக்கெட் விளையாடவே ஆரம்பிச்சோம்.அதென்ன இது விளையாடக்கூடாது அது விளையாடக்கூடாதுன்னு சொல்றது...அப்டின்னு.

பாத்தா புட் பால் விளையாட அதிக உபகரணம் தேவையில்ல கிரிக்கெட் விளையாட என்னென்னமோ தேவ அப்டிம்பாங்க நாம தான் மரத்த ஸ்டெம்பாவும்,கிளைய பேட்டாவும் மாத்துற கேடிகளாச்சே அப்றமென்ன?

சரி எல்லோரும் சொல்றாங்களே,புட் பாலையும் பாப்போம்னு நேத்து பாத்தேன்,செக் நாடும் டோகோன்னு (?!) ஒரு நாடும் விளையாடிச்சு.நல்லா தான் போச்சு மஞ்ச சட்ட நாடு பாவமா இருந்ததால அது ஜெயிக்கணும்னு பாத்தேன்.கோல்போஸ்ட் பக்கத்துல நம்மாளு அடிக்கிற நேரம் வந்து சிவப்பு சட்ட ஒருத்தன் கெட்டியா பிடிச்சுக்கிட்டான் பா.அத அம்பயரு(வேற ஏதும் சொல்வீங்களோ தெர்ல) கண்டுக்கவே இல்ல,இதே மாதிரி சிவப்பு சட்ட பண்ண மஞ்ச சட்டயும் ஆரம்பிச்சிட்டானுவ. அடப்பாவிகளா ஏதோ சில தடவ கறுப்பு சட்ட அம்பயரு தடுத்தாரு அப்புறம் போங்கடா வெளக்கெண்ணங்கிற மாதிரி தேமேன்னு விட்டுட்டாரு போல.

கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டண்ணே வார்த்த விளையாட்டு இருக்குமே தவிர ஆளப்பிடிக்கிற கோக்கு மாக்கு வேல நடந்தது... அம்புட்டுதேன் கத.ஸ்டீவ் வாக் , இன்சமாம் பந்த தடுத்ததுக்கு அவுட் குடுத்தது நல்ல உதாரணம்.

ஆனாலும் ஒவ்வொரு விளையாட்டும் முன்னேறணும் அதுக்கு அதயெல்லாம் பாக்கணும்தான்...முயற்சி செய்(வோம்)யறேன்.

Categories:

Sunday, June 11, 2006

பெண்ணியம் போல் இது ஆணியம்

நான் அவ்வப்போது பெண்கள் மலர்,குடும்ப மலர் மாதிரி பத்திரிக்கைகளை படிப்பதுண்டு.பெண்கள் சமைக்க மட்டுந்தானா (அதிரடியாக வேறு வார்த்தை போட்டும் கேட்டிருந்தார்கள்) என்று முதல் பக்கத்திலும், நூல்கோல் சூப் வைப்பது எப்படி என்று கடைசி பக்கத்திலும் கோலம், வீட்டுக் குறிப்புகள்,ஆண் வர்க்கத்தை திட்டி ஒரு சிறுகதை என்று ஏகப்பட்ட வெரைட்டி கிடைக்கும்.

ஏனென்றே தெரியவில்லை பெண்களின் உலகம் அதாவது பெண்களின் மீடியா உலகம் ஆண்களை திட்டுவதாகவே அமைந்துள்ளது.எந்த பெண்கள் பத்திரிக்கையிலாவது ஆண்களின் படம்,அவர்களை பற்றிய குறிப்பு,மாதவன் என்ன ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார் என்றெல்லாம் இருக்கிறதா? இதே ஆண்கள் (சரி அப்படி எதும் இந்தியாவில் இல்லை/எனக்குத் தெரியவில்லை) அல்லது ஆண்கள் அதிகம் வாங்கும் பத்திரிக்கையை பாருங்கள்.சானியாவில் இருந்து நமீதா வரை எல்லா தகவலும் இருக்கும்,

ஓகே சீரியஸ்... என்ன சொல்ல வந்தேன் என்றால் நேற்று செல்வி தொடரில் கடைசி காட்சி பார்த்தேன் (ந்ண் எப்போதும் பத்து மணிக்கு மேல் தான் வீட்டிற்கு போவது...சீரியல்களை தவிர்க்க,ஆனாலும் நேற்று சீக்கிரம் போய் விட்டேன்) ராதிகா வில்லனை பார்த்து சில டயலாக்குகள் பேசி விட்டு கடைசியில் ஒருவரை ஒரு தள்ளு, இன்னொருவரை ஒட்சே ஒரு அடி ஆஹா...எனக்கு ஏனோ இது அந்நியமாகவே பட்டது,பெண்களை பற்றிய பழைய அபிப்ராயமோ என்னவோ...பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் பெண் போராடுவது,சண்டை போடுவது எல்லாம் சகஜம் தான் ஆனால் ஆண்களை திட்டுவது,ஆண்களை அடிப்பது ஏன் என்று தான் கேட்கிறேன்.

ஆண்கள் அதிகம் டாமினேட் செய்யுமிடமென சினிமாவை எடுத்துக் கொண்டால் அங்கே கூட ஆண்கள் ஆண்களுடன் தானே போராடுகிறார்கள் (சில அரிதான நிகழ்வுகளை தவிர்த்து).

அதே போல பெண்கள் விளம்பரங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்று போராட்டங்கள் நடத்துகிறார்கள்.அதே செல்வி தொடரின் இடைவேளையில் விளம்பரம் ஒன்று போடப்பட்டது, "இவரை நான் பத்து ரூபா கொடுத்து வாங்கினேன்" என்கிறார் ஒரு அழகி, பதறிப்போய் பார்த்தால் ஒரு பியூட்டி சோப் வாங்கினாராம் அந்த ஈ அழகனை அதற்காக 10 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்கிறார்.புற அழகை பார்த்து மயங்குவது சரியா தவறா என்கிற வாதம் வேண்டாம் (ஏனென்றால் ஆண்கள் பக்கம் வாதாடி நான் தோற்று விடுவேன்).அதென்ன பத்து ரூபாயில் ஆண்களை கேவலப்படுத்துவது, அசின் வரும் ஒரு கிரீம் விளம்பரத்திலும் இதே போலத்தான் கறுப்பாக இருக்கும்போது வேண்டாம் என ஒதுக்கும் ஆண் அசின் இக்கிரீம் பூசி அழகானதும் ஓடிப்போய் கெஞ்சுகிறார்.ஆண்களின் குணாதிசயம் தானே என்கிறீர்களா அப்படியானால் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் கண்டு கொள்ளாமல் விடுங்கள் பெண்களின் குணாதிசயம் அப்படியென்று.

அறியப்படுபவை (இவற்றில் ஒன்றோ பலவோ உண்மையாக இருக்கலாம்)
1.ஆண்கள் கேவலமானவர்கள் , பெண்கள் உண்மை பேசுபவர்கள்
2.ஆண்கள் கேவலமானவர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள்
3.ஆண்கள் கேவலமானவர்கள், உப்பு போடாதவர்கள்
(இத்தோடு நிறுத்திக் கொண்டால் இப்பதிவு பெண்கள் இதழுக்கு போய் விடும்)
4.பெண்கள் ஆண்களை திட்ட முடியவில்லை திட்டுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்
5.4வது சொன்னது உண்மை என்று மீடியா நினைக்கிறது
6.பெண்கள் குறைகளை பெரிது படுத்துபவர்கள்

எப்படியாயினும் முடிவு ஒன்றே ஒன்று தான் இனி ஸ்ட்ரிக்டாக பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு போகக்கூடாது.

Categories:

Thursday, June 08, 2006

ஏழை என்பதில் என்ன பெருமை

"ஒவ்வொரு தடவை உணவுக்கும்
உயிர் விடுமளவுக்கு துணியும் நீ சாமுராய்
ஏழையிடம் மட்டுமே வீரம் காட்டுவதால்
நீயும் ஒரு போலீஸ்காரன்"

என்று கொசுவைப்பற்றி எழுத நினைத்தபோது எனக்கும் கூட ஏழை என்பது பெருமையான ஒரு பட்டம் போலத் தான் தோன்றியது. அண்ணா ஒருமுறை சொன்னாராம்,"இந்தியா ஏழை நாடல்ல ஏழைகள் வாழும் நாடு" (அண்ணாவா, நேருவா?).சினிமா ஹீரோக்களும்,அரசியல்வாதிகளும் சேர்ந்து ஏழை என்பது ஒரு சந்தோஷப்பட வேண்டிய பாக்கியம் என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்கள்.

பணம் படைத்தவன் தவறான வழிகளில் மட்டுமே அந்நிலைக்கு வரமுடியும் என்பது போலவும்,இரவில் தூக்கம் வராமல் மாத்திரைகளை நம்புவது போலவும் நாம் உளவியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம்.ஏழையாக கட்டாந்தரையில் படுத்தால் சுகமான தூக்கம் கொஞ்சும்,பஞ்சு மெத்தையில் படுத்தாலும் பணக்காரனுக்கு நிம்மதி இருக்காது இன்னும் என்னென்னவோ.

பணக்காரன் என்பவன் புத்திசாலி,எல்லோரும் ராஜ பரம்பரையில் பணக்காரர்களாகவே பிறப்பதில்லை, ஏழையாக இருந்து சரியான வழியில் நேரத்தை திட்டமிட்டு செலவழித்து கஷ்டப்பட்டே பணக்காரராகிறார்கள்.அப்படியே பிறக்கும்போதே பணக்காரராக பிறந்திருப்பினும் வெற்றியை தக்க வைப்பதை விட பெரிய சாதனை உண்டா?

நம்மாளு மிக சாதாரணமாக பொய் சொல்வான் அதுவும் ஆயிரம் பொய் அவன் அப்பவே நல்லா படிச்சான் என்று ஆரம்பித்து கல்யாணம் பண்ணின யோகம்யா என்பது வரை.ஏழையாக இருப்பது கேவலம் நம் சோம்பேறித்தனத்திற்கும், சரியான வழியில் முயற்சி செய்யாமல் இருப்பதற்கும் கிடைக்கிற தண்டனை என்பதும் நம் மக்களால் உணரப்படுவதே இல்லை என்பது கசப்பான உண்மை.

நாம் வேலை உருவாக்கும் படிப்பு எதுவோ அதற்கு முக்கியத்துவம் தருவதை விட வேலை கிடைக்கிற படிப்பு எதுவோ அதை தேடிப்போவதில் தான் ஆர்வம் காட்டுகிறோம்.வட மாநில மக்கள் கூட பொறியியல் படிப்புகளை விட நிர்வாக படிப்புகளுக்கு (MBA) முக்கியத்துவம் தருகிறார்கள் என்று அங்கே தங்கி விட்ட என் நண்பன் கூறுவான்.

ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதார உயர்வு மட்டும் நிகழ்ந்தால் போதும் அரசியல்வாதியில் ஆரம்பித்து நாட்டின் ஒவ்வொரு அரசாங்கத் துறையும் விழிக்கும்.ஏழையாக இருப்பதில் மமதை கொள்ளும் மனோபாவத்தில் இருந்து வெளி வருவோம்.கலாம் விரும்பிய இந்தியா 2020க்கு முன்பே கிடைக்கும்.

Categories: ,

Wednesday, June 07, 2006

இணையம்,டேட்டிங்,பணம்

முதல் முதலாக பத்தாம் வகுப்பு படித்தபோது இணையம் எனக்கு அறிமுகமானது.study in canada என்கிற விளம்பரத்தை பார்த்து விட்டு தட்டுத்தடுமாறி அறுபது ரூபாய் சேர்த்து இணைய மையம் வந்தேன்.ஏசி, அமைதியான இடத்தில் மெல்லிய இசை, ரெண்டே வார்த்தை பதில்கள் எனக்கு இது நம்மூர் தானா என்ற குழப்பத்தை உண்டாக்கின.தள முகவரி அடிக்க வேண்டிய இடத்தில் பொறுமையாக அடித்து வைக்க page cant be displayed காட்டியது.இன்னும் பொறுமையாக திரும்ப அடித்தேன் திரும்ப அதே...சுமார் அரை மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு ஜெயிக்கவில்லை...ஓனரைக் கூப்பிட்டேன்.அவர் இதுக்கு பேர் email id இது போட்டா ஒண்ணும் வராது இதப்போடணும் என்று அதில் இருக்கும் முகவரியை அடித்தார், வந்தது.அவர் போனதும் அதை close செய்தேன்.நானே திரும்ப இன்னொரு விண்டோ திறந்து studyincanada.comக்காக s என அழுத்தியதும் அவ்வெழுத்தில் ஆரம்பிக்கும் முன்பே பார்க்கப்பட்ட தள முகவரிகள் காட்டப்பட்டன.ஏகப்பட்ட முகவரிகள் எல்லாமே sex என ஆரம்பித்தன, தலையில் இரு கொம்புகள் முளைத்தன

நண்பர்களிடம் பகிர்ந்தேன்... அவ்வளவு தான் ஒரு சிஸ்டத்திற்கு நான்கைந்து பேர் படையெடுப்போம் அப்போது தானே அறுபது ரூபாயும் ஷேர் ஆகும் அப்புறம் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் போல மூன்று மாதங்களுக்கு மேல் எனக்கே உவ்வே ஆனது.இணையத்தின் மற்ற பக்கங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்,இப்போது வரை ஆச்சர்யம் யாரிடமும் நான் எதையும் கேட்கவேயில்லை மின்னஞ்சல் எப்படி வேலை செய்கிறது என்பதில் ஆரம்பித்து இணையம் இயங்குவது வரை இணையமே எனக்கு கற்றுத் தந்தது.

அடுத்து நேரம் அதிகம் வீணானது இணையத்திலிருக்கும் டேட்டிங் தளங்களால் தான்.இணையத்தில் நான் புரிந்து கொண்ட முதல் பாடம் "இது அமெரிக்கர்களுக்கானது".இணையத்தில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி பெற அதிக வாய்ப்பு நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் தான்.டேட்டிங்கில் ஆரம்பித்து ஆன்லைன் வர்த்தகம் வரை இந்தியாவில் ஒர்க் அவுட்டாக வாய்ப்புகள் மிகக்குறைவு.

காரணம் இந்தியர்கள் "touch & feel" நம்பிக்கை உடையவர்கள்.தொட்டுப் பார்க்காமல் எதையும் வாங்க மாட்டோம்.அமெரிக்கர்களைப் போல ஒரு டிஜிட்டல் இமேஜைப் பார்த்து பொருளை நம்பி வாங்க மாட்டோம் வாங்கவும் முடியாது.தவறு இரு பக்கமும் தான்.கஸ்டமர் கேர் அவ்வளவு மோசமாக இங்கே உள்ளது.இப்போது நிறைய கம்பெனிகள் வந்திருந்தாலும் இந்திய ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள் இதை இன்னமும் கூட புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.தான் ஏமாற்ற மாட்டோம் என்ற நம்பிக்கையை இந்தியாவில் ஒரு முறை உருவாக்கி விட்டால் பலமான அஸ்திவாரம் அமைத்து விடலாம்.

நான் சொல்ல வந்தது இதுவல்ல, இப்போதாவது உருப்படியாக மீதி நேரத்தை வலைப்பூக்கள் பதிப்பதில் செலவு செய்கிறேன் முன்பெல்லாம் டேட்டிங் தளங்களை பார்ப்பதும் ஆன்லைன் நண்பர்களை (ஹானஸ்ட்லி இருபாலினமும் தான்)சேர்ப்பதும் மட்டுமே வேலை.ஆணோ,பெண்ணோ சந்தித்ததில்லை.சில சமயங்களில் என்னால் சில சமயங்களில் அவர்களால்.முக்கிய காரணம் இணைய வலை எப்படிப்பட்ட ஆளாகவும்,புரிதல் உடையவராகவும் பழகி இருப்பினும் பார்க்காதவராக இருந்தால் நம்பிக்கையின்மையோடான ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.சமீப காலங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளில் எனக்கு முதலில் ஆச்சர்யமும் பின்பு ஆர்வமும் ஏற்பட்டது.ஆனால் நான் அச்சமயங்களில் எல்லாம் மிஸ் பண்ணி விடுகிறேன் அது மட்டுமின்றி தலைப்பை பார்த்து விட்டு படிக்கப் போனால் எல்லாம் தனி மனித அ சாதி சண்டைகளாக இருக்கிறது ஆதலால் நண்பர் வட்டம் ஏதும் இல்லை,நாமக்கல் நண்பர்கள் இருந்தால் நேரில் பார்க்கலாம்.மற்றபடி மெயிலில் சில நண்பர்கள் சந்தேகம் கேட்பதுண்டு.

ஆனால் இப்போது வேறு மாதிரி நிலை,இணையம் எனக்கு பணம் தர ஆரம்பித்து விட்டது. ஆம், வேலையை விட்டு விட்டு மேற்படிப்புக்காக கல்லூரி சேரும்வரை வீட்டில் இருக்கலாமென இங்கு வந்தேன். வலைப்பூக்களில் ஏதாவ்து செய்யலாம் என்று இணைய மையத்தில் உறுப்பினராக பணம் கட்டியபோது நான் web designer என்று சொல்ல அதே நாளில் ஒருவர் தங்களுக்கு ஒரு தளம் வேண்டுமென்று கேட்க ஒரு கல்லூரிக்கான அத்தளம் உருவாக்க ஆரம்பித்தேன்.அவர்கள் அதற்கு முன் bid செய்த ஒருவரின் சாம்பிள் தளத்தை காட்டினார்கள்,நான் தவறாக சொல்லவில்லை ஆனால் அது மிகவும் சாதாரணமானது,அதை விட மலிவாக தரமானதாக செய்து தர முதல் வேலை ஆரம்பமானது இப்போது வரை நான்கு ப்ரொஜெக்ட்கள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கின்றன.

சொந்த கம்பெனி ஆரம்பிக்க யோசிக்குமாறு மார்க்கெடிங் நண்பர்கள் சொல்கிறார்கள்,எனக்கு இதுவே கனவா,நனவா என்று தெரியவில்லை.

Categories:

Tuesday, June 06, 2006

லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு

நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது அறிந்ததே.நான் இப்போது சுயதொழில் புரிவதால் நாமக்கல்லின் ஒரு இணைய மையம் (Browsing Center) தான் அலுவலகம்.நேற்று இந்த பரபரப்பில் நானும் முடிவு அறிவிக்க ஆரம்பித்தேன்.இந்த மாதிரி நாட்களில் தான் இம்மாதிரி மையங்களுக்கு வாய்ப்பு, ஒரு முடிவு அறிவிக்க பத்து ரூபாய்.

என் அத்தை மகன் பத்தாவது அவன் செல்லப்பெயர் லட்டு, இனி வருவதெல்லாம் அவன் அம்மாவின் பேட்டி:

"காலைல ஏழு மணி இருக்குங்கண்ணு, படக்குன்னு ஏந்திரிச்சான், பிதா சுதன் போட்டான்.அவனுக்கு புடிச்சது ஏசு தான்.அம்மா தண்ணி எடுத்து வை குளிக்கணும்னான்.எனக்கு ஒண்ணும் புரியல,அட நம்ம புள்ளைக்கு பக்தி எல்லாம் வந்துருச்சே அப்டியே சாமி ரூம் போனான் அவனுக்கு அடுத்து புடிச்சது கருமாரி அப்டியே கண்ண மூடி கும்பிட்டான்,வெளியே கிளம்பினான்.எங்க கண்ணு போறன்னேன், ஆஞ்சநேயர் கோயிலுக்குன்னான்,அம்மாவுக்கே அம்பது காசு கொடுக்காதவன் அவருக்கு அஞ்சு ரூபா உண்டில போட்டிருக்கானப்பா

என்னக்கூட்டிட்டு இண்டர்நெட் வந்தான்,கோகுலு இருப்பான்னு நெனக்கலயாட்டமிருக்கு, யம்மா என்னம்மா மாமா உள்ள இருக்கு அதனால என்னடா அவன்ட்டயே குடு சீக்கிரம் பாப்பான்னேன் என்ன நினைச்சானோ சத்தமில்லாம பக்கத்தால வேற ஆளுகிட்ட குடுத்தான்

கோகுல் முதுகப்பாத்தே டேய் லட்டு வாடா இங்கேன்னான் கிக்கிக்கீன்னு போனான் 234ன்னு பேப்பர் தந்தான் கோகுலு லட்டு பாசாயிட்டே ன்னான் நான் அப்பவே சொன்னேன் மாமா கண்டிப்பா பார்டர் பாஸாய்டுவேன்னுன்னான்

வேட்டே அப்பா கிட்ட தானே டேய் எத்தனடா மார்க்கு? ஒடனே நம்மாளு மார்க்கு தெர்லப்பா பாஸாயிட்டேன் அவருக்கு இடி இடிச்சாப்ல ஆய்டிச்சி அது யார்ராவன் பாஸானத மட்டும் சொல்றவன்
செரி இனி என்ன பண்ண ரெண்டு நாள்ல என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணனும்,நீயும் சொல்லு கோகுலு மாமாகிட்ட"

மதிப்பெண் மோகத்தில் அலையும் பெற்றோர் மத்தியில் திருப்தி படும் இவர் தங்கம் தான்.மனனக் கல்வியில் திறமை என்று காட்ட ஏதுமில்லை என்பது என் கருத்து.குறைந்த மதிப்பெண் வாழ்க்கையை பாதிப்பதும் தவறானதே.ஓவியத்தில் விருப்பமிருப்பவன் கணிதத்தில் பெயிலாகலாம் அதற்காக உடனே (இங்கே) பட்டறைக்கு அனுப்புவது என்ன நியாயம்? ராமானுஜரே பட்டப்படிப்பில் கணிதத்தில் மட்டும் அதிக மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் பெயிலாவதுமாக இருந்தாராமே

எப்படியாயிருந்தால் என்ன...? லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு கொண்டாடு

Categories: ,

Friday, June 02, 2006

பயம்...பயப்படுத்தும்

"மீன் குஞ்சுக்கு நீந்தக்கற்றுத் தர வேண்டுமா?" என்பது போல பயம் எப்போதிருந்து ஆக்ரமித்ததென்றே நினைவில்லை, ஆனால் இப்போது வரை இருக்கிறது.ஆண் அழக்கூடாது, பயப்படக்கூடாது என்பவை கட்டாயம் என்கிற மாயை இருப்பதால் அதை வெளிக்காட்ட மறுக்கிறேனே தவிர பயம் என் நிழலை விட எனக்கு நெருக்கமானது.தனிமையோ, இரவு பன்னிரெண்டு மணியோ நிச்சயம் பயத்திற்கான காரணிகளாகப்படவில்லை.காரணம் இரவு 11 -12 மணிக்கு தனியாக சுற்றிய அனுபவங்கள் உண்டு.பயம் அந்த ஒரு குறிப்பிட்ட நாளுக்கு சொந்தமானது அப்போது மட்டுமே அது வரும்.

கல்லூரி படித்தபோது சில நாட்களில் இரவு 12,ஒரு மணிக்கெல்லாம் பாத்ரூம் போக வேண்டிய கட்டாயம் வரும், தண்ணீர் அதிகம் குடித்தால் ;).அப்போதெல்லாம் பயமும் சேர்ந்து வரும்.அதை வீட்டில் சொன்னால் என்னடா இத்தனை வயசாயிடுச்சு இன்னமும் பயப்படுற என்பதில் ஆரம்பித்து ஆண்பிள்ளை வரை தேவையில்லாத சம்பந்தமில்லாத துறைகளுக்கெல்லாம் போவார்கள் என்பதால் அமைதி காப்பேன் யாராவது எழுந்தால் போகலாமென்று.ஆனால் கடைசியில் தனியாகத் தான் போக வேண்டி வரும்.அதுவும் பாத்ரூமில் கொஞ்சம் அதிக நேரம் நிற்க வேண்டி வரும் பாருங்கள்... கொடுமை.ஒரு நாள் ரொம்ப கடுப்பாகி விட்டது நானும் பயப்படுகிறேனே தவிர பேய் எதையும் பார்த்ததில்லை.நின்று இப்போ பேய் ஏதாவது இருந்தா வரணும் நான் பார்க்கணும் என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் நின்று இருக்கிறேன்.அப்போதெல்லாம் "என்ன தம்பி கூப்டியா?" என்று ஏதாவது குரல் கேட்டிருந்தால் ஐயய்யோ Horrible!

இப்போது வரை பேய் என்கிற கான்செப்டில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை, இருளில் நடக்கும்போது பின்னால் ஏதாவது சத்தம் கேட்டால் பயந்த மனது தனக்கேற்றவாறு கற்பனை செய்துகொள்கிறது, திரும்பிப் பார் ஒன்றுமில்லை வெறும் காற்று தான் என்று மூளை சொல்லும் ஆனால் எங்கே முடிகிறது?
அதே போல செத்தவர்கள் எல்லாம் பேயாக வேண்டுமானால் எத்தனை ஆடு,கோழி நானே சாப்பிட்டிருப்பேன் அதெல்லாம் வராதா ஏன் மனித உருவமே பேயாகிறது அதுவும் பொதுக்கூட்டத்தில் வரவேண்டியது தானே ஏன் தனியாக ஒருவன் போகும்போதே வர வேண்டும் என்றெல்லாம் வக்கணையாக யோசிப்பேன் ஆனால் பயம் பயம் தான்.

மற்றபடி இதெல்லாம் ரகசியம் தான் காரணம் நான் பயப்படும் தருணங்கள் அரிதானவையாகி விட்டன.அதில்லாமல் மற்றவர்களை பயப்படுத்தும் அளவு பேய்க்கதை சொல்லமுடிவதால் அவர்களின் பயத்தை பார்த்துவிட்டு இப்படித்தானே நீயும் பயப்படுகிறாய் என்று எனக்கே கேலியாக இருக்கும்.இப்படி பயப்படுத்துவதற்கெனவே நிறைய கதைகள் உண்டு,அதில் மிக புகழ் பெற்றது மோதிரக்கதை... இப்போது வரை 100% இக்கதை மூலம் பயப்படுத்த முடியும் அவ்வளவு அருமையாக யோசித்திருக்கிறார்கள்
யாரென்று தெரியவில்லை அதுவும் இரவில் ஒரு கும்பலைக்கூட்டி இதை சொன்னால் பெட்டர்.மற்றபடி ஒரு பேய்க்கதைக்கான சூழலை உருவாக்கினால் போதும்.பலகீன இதயமுள்ளோர், குழந்தைகள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

ஒரு ஏழைக்கிழவி தன் மகனோடு இருந்தாள் அவளுக்கு தங்க மோதிரம் போட ரொம்ப ஆசை தன் சொத்தை விற்று போடுகிறாள், அன்று நல்ல மழை சோம்பேறி மகன் கோபத்தில் கொன்று விடுகிறான் எல்லோரிடமும் மறைத்து நோயில் செத்ததாக புதைத்து விடுகிறான் அன்றிரவு தான் நினைவு வருகிறது தங்க மோதிரம் கழட்டாமல் விட்டது...போய் தோண்டி பிணத்தின் கையிலிருந்து மோதிரத்தை உருவுகிறான் ஆனால் அது வரவேயில்லை அந்த மோதிரவிரலை வெட்டி மோதிரத்தை எடுத்துப் போகிறான்.அதற்கப்புறம் அவனுக்கு பணம் குவிகிறது. பங்களா, மனைவி என்று செட்டிலாகி விட அதே போல ஒரு மழை நாள்...
அதே போல ஒரு கிழவி வாசலில் ஹீனமான குரலி "ஐயா பசிக்குதுய்யா" என்கிறாள்
இவனுக்கு மனது கேட்கவில்லை, அவளை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறான்.நலம் விசாரித்தான்.
சாப்பாடு போட்டான், அவன் தாய் போலவே இருக்கிறாள்,

"ஏன்மா உங்க குடும்பத்தில யாருமில்லயா?"
"இருந்தாங்கப்பா என் மகன் கடைசி வரை இருந்தான் இப்போ பிரிஞ்சிட்டான் கூட்டிட்டு போக தான் வந்திருக்கேன்"
"சரி சரி சாப்பிடுங்க"

அவ்வப்போது கிழவி அவனை தீர்க்கமாக பார்க்கிறாள், அவன் மனசாட்சி குத்த குனிகிறான் அப்போது தான் கவனித்தான்...கிழவிக்கு மோதிர விரல்...இல்லை
"என்னம்மா இது மோதிர விரலக்காணோம்"
"அது...வெட்டிட்டாங்கப்பா"
"யாரும்மா வெட்டினது?" கேட்டது தான் தாமதம் கிழவி சடாரென நிமிர்ந்து முறைத்து பார்த்தாள்
"இல்ல தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன் யாரும்மா வெட்டினது?"
..
..
..

நீ தான்

இதை மட்டும் திடீரென சத்தமாக சொல்ல வேண்டும் ஒருமுறை கம்பெனியில் எல்லோரையும் உட்கார வைத்து சொன்னேன், ஒரு பெண் பாவம்...வீறிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.
என் பயமும் கூட என்னைப்பொறுத்தவரை இப்படி ரசிக்கக்கூடியதாக வாழ்வின் சுவைகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது,இருக்க வேண்டும் ஆதலால் பேய்கள் வாழ்க

Thursday, June 01, 2006

அருவி அபாயங்கள்

காட்டருவிகள் உற்சாகம் தருபவை, பெரும்பாலும் மலைகளுக்கிடையே மட்டுமே காண முடிவதால் அவற்றை நினைத்தாலே லேசாக குளிரடிக்கும்.ஆனால் அருவிகளின் இன்னொரு முகம் கோரமானது.

நாங்கள் கல்லூரியில் படித்தபோது அடிக்கடி கொடைக்கானல் மற்றும் அடிவாரத்திற்கு டூர் போவோம்( பழனியிலிருந்து கொடைக்கானல் ரொம்ப பக்கமே).அங்கே கொடைக்கானல் அடிவாரத்தில் ஒரு 4 கிலோமீட்டர் தொலைவில் ஒரு அருவி உண்டு.காட்டுப்பாதை நடந்து தான் போக வேண்டும், அங்கே ஹோட்டல் முதலாளி,வேலை செய்தவர்கள் எல்லாம் இப்போதும் எங்கள் நெருங்கிய நண்பர்கள் (வள்ளுவர் ஹோட்டல் என்பது பெயர் பழனியில் புகழ்பெற்றது).பிரியாணி செய்து ஐம்பது பேர் போனோம்.4 கிலோமீட்டர் தள்ளி அவ்வளவு அழகாக ஒரு அருவி அது தான் காட்டுப்பாதையின் முடிவு.சலசலவென தண்ணீர் சப்தம் நண்பர்கள் கையோடு 'தண்ணி' எடுத்து வந்திருந்தார்கள் (அப்போதெல்லாம் நான் பழகியிருக்கவில்லை நல்ல பையன்...) ஸ்னாக்ஸ் கொள்ளையை ஆரம்பித்தோம், தண்ணியடிப்பவன் பக்கத்தில் இப்படி ஒரு கும்பல் கடுப்பேத்தும் ஆனால் அவர்களும் எதிர்காலத்தில் அடிக்க ஆரம்பித்து விடுவது தான் ஹைலைட்.

ஒரு இருபது பேர் அப்படியே குளிக்க கிளம்பினோம்.அருவி என்றால் ஒரே ஒரு இடத்தில் இருந்து விழவில்லை கொஞ்ச தூரத்தில் மெயின் அருவி விழ அங்கே ஒரு பழைய காலத்து குட்டி அணைக்கட்டு ஸ்டைலில் தடுப்பு இருக்க அதற்கு கீழே ஓட்டைகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.நாங்கள் அந்த தடுப்பின் மேல் அமர்ந்திருந்தோம்.ஐஸ்கட்டிகளை மொத்தமாக உருக வைத்திருந்தால் எவ்வளவு சில் என்றென்று இருக்குமோ அப்படி இருந்தது, அப்படியே குளித்தபோது ஒருவன் இங்கிருந்து நீந்தியே மெயின் அருவிக்கு போகலாம் என்றான் எல்லோரும் ஒப்புக்கொண்டோம்.எனக்கு அப்போது ஷான் நீச்சல் பழக ஆரம்பித்திருந்த காலம் லேசாக உதறல் தான் இருப்பினும் 20 பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் நீந்த ஆரம்பித்தேன் பார்க்கும்போது ரொம்ப பக்கம் போலத் தெரிந்த அருவி நீந்தும்போது ஏதோ தொலைவில் தெரிந்தது ஒவ்வொருவராக என்னைத் தாண்டிப்போக ஆரம்பித்திருந்தார்கள் நான் தான் கடைசி சரி கொஞ்ச நேரம் நின்று விட்டு நீந்துவோம் என்று அப்படியே நின்றேன் மார்பளவு தண்ணீரில் தரை தட்டுப்பட்டது ஊறிய இலை,தழைகளோடு.ஒரு நொடி தான் அப்படியே காலில் தரை கரைகிற உணர்வு அதாவது அது தரை இல்லை இலை,தழைகள் கடைசி வரை அது மட்டுமே அதாவது நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன் இத்தனையும் ஆலோசித்தபோது தான் உறைத்தது வாய் வரை முழுகி விட்டது மூளைக்குள் முதுகெலும்பு வழி மின்சாரம் வ்ர்ரென பாய கண்களை மூடிக்கொண்டு நீந்த ஆரம்பித்தேன் 20 பேரையும் முந்தி வெறும் ஒரு நிமிடத்தில் மெயின் அருவியைத் தொட்டிருந்தேன்.என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.

இதற்கடுத்து சொல்லப்போவது மிகவும் பயங்கரமானது மற்றும் இப்போதும் நிகழும் சம்பவம்.என் பக்கத்து வீட்டு நண்பர் பொள்ளாச்சி அருகே அருவிக்கு குளிக்க அவர் நண்பர்களுடன் போயிருக்கிறார்.குளித்துக் கொண்டிருக்கும்போதே பத்து பேரில் ஒருவரைக் காணோம், சரி என்று விட்டு விட்டார்கள் போகும்போது தான் சீரியஸ்ஸாக உறைக்க எல்லோரும் தேடியிருக்கிறார்கள் ஆளே கிடைக்கவில்லை இரவு வரை கிடைக்கவில்லை மறு நாள் போலீஸுக்கு தகவல் சொல்லி, குடும்பத்திற்கு தகவல் சொல்லி எல்லோரும் வந்திருந்தார்கள்.கூட்டம் கூடி பேசிக்கொண்டிருக்க அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், ஒருவேளை தண்ணீருக்குள் பாறைகளில் சிக்கியிருக்கலாம், இங்கிருக்கும் ஊசி,தேனெடுப்பவர்களை கேட்டால் தேடிப் பார்ப்பார்கள் என்று.அவர்களை அழைத்திருக்கிறார்கள் தேடிப்பார்க்க அவர்கள் செய்த டீல் தான் கொடுமையானது பதினைந்தாயிரம் டிமாண்ட் செய்திருக்கிறார்கள்.அப்போதும் பிணம் தான் கிடைக்கும் என்று சொல்லி.தரும் வரை போகவில்லையாம், தந்ததும் வெறும் அரை மணி நேரம் தானாம், கால் பாதத்திற்கு மேல் ஒரு காயம் பாறையிடுக்கில் சிக்கி உயிர் போய் விட்டது என்று கூலாக சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

என் நண்பருக்கு சந்தேகம் பொறுமையாக விசாரிக்க பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருக்கின்றன அதாவது அந்த சிலருக்கு அது தான் வேலையாம் அவர்களுக்கு தண்ணீர் ஆழத்திற்குள் இருக்கும் அத்தனை விஷயமும் தெரியுமாம்.தண்ணீருக்குள்ளேயே காத்திருந்து இப்படி வருபவர்களில் அவ்வளவு லாவகமாக நீந்தத் தெரியாதவரை சரேலென நீருக்குள் காலைப்பிடித்து இழுத்துப்போய் பாறையிடுக்குகளில் வேகமாக அடித்து சொருகி வைத்து விடுவார்களாம்.அப்புறம் ஒன்றும் தெரியாத மாதிரி வெளியே வந்து விடுவது.எதற்காக... அந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்துக்காக.அதைக் கேள்விப்பட்டதில் இருந்து இப்போது வரை அருவிகள் எனக்கு பயத்தையும் மிரட்சியையுமே தருகின்றன.

ஆகவே எச்சரிக்கை தெரியாத அருவிகளில் குளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.

Tuesday, May 30, 2006

தமிழ்மணத்திற்கு என் ஐடியாக்கள்

தமிழ்மணத்தில் இப்போது புதிதாக Cloud அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.இது போல தர நிர்ணயம் (Quality Check) பயனர் மூலமாகவும் கேட்பார்கள்.என் தளத்திற்கு 90 சதவீத ட்ராபிக் தமிழ்மணம் மூலமே வருகிறது ஆதலால் சில யோசனைகள் தரலாம் என விழைகிறேன்.

"Search Column" ஒரே ஒரு டைப் பண்ணும் பகுதி மற்றும் Enter பட்டனோடு முதல் பக்கத்தில் வைப்பது தான் சிறந்தது மற்றும் வழக்கமானது.ஆனால் நம் தமிழ்மணத்தில் அது இரண்டாம் பக்கம் ஒரு லிங்க் வைத்து இன்னும் ஒரு புது பக்கமாக வருகிறது.இவ்வளவு தூரம் வந்து பார்க்க பயனர் யோசிக்க மாட்டார் அல்லது அப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாமல் போய்விடும்.

மறுமொழி மட்டுறுத்தல் (Comment Moderation) மூலம் அதிக கமெண்ட் தரப்பட்ட பக்கங்கள் தனியே காட்டப்படுகின்றன.அதிக பேர் பாராட்டியோ விவாதித்தோ தரப்படும் கமெண்ட்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது,(எனக்கும் நிறைய முறை இங்கு இடம் கிடைக்கிறது என்றாலும்)இந்நோக்கமே சிதைபட்டுள்ளது.பெரும்பாலும் கமெண்ட்களில் வாக்குவாதங்கள் தான் நிகழ்கின்றன.இதனால் தரமில்லாத பதிவுகளும் கூட சில சமயங்களில் இடம் பெற வாய்ப்புள்ளது/நல்ல பதிவுகள் இடம் பெறாமல் போகவும் வாய்ப்புள்ளது அதாவது கமெண்ட் எழுதப்படாத நல்ல பதிவுகளும் உண்டு எல்லா பிரச்னைகளையும் தெளிவாக அலசும் பதிவுகளுக்கு பாராட்டை தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றாது, ஏற்கனவே பத்து பேர் பாராட்டியிருந்தால் அடுத்து வருபவர் சொல்ல நினைப்பதை அவ்வளவு பேரில் யாராவது ஒருவர் சொல்லியிருப்பார்.இதற்கு பதில் அதிகம் பேர் விசிட் செய்த பதிவுகளை காட்டலாம் (எப்படி என்று நானறியேன் ஒரு யோசனை அவ்வளவே)

ஒரு பதிவை ஒருவர் தமிழ்மணத்தில் அப்டேட் செய்ததும் 'ஜன்னலை மூடு' என்று காட்டுகிறது அப்படியே அருகே தமிழ்மணத்தின் மூலப்பக்கத்திற்கு ஒரு லிங்க் தரலாம்.பதிவருக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஓய்வாக ஏதேனும் படிக்கத் தோன்றும் உடனே தமிழ்மணம் வர ஏதுவாக இருக்கும்.

கவிதை,சிறுகதைகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை அதற்கு ஏதாவது போட்டி நடத்தலாம் (பரிசு... ட்ராபிக் தான்) சிறந்த நான்கு வரி கவிதை ஒன்றை தினமும் தேர்ந்தெடுத்து முகப்பு பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் போடலாம்.

புதுப்பேட்டை - விமர்சனம்


படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்டியே டான்செட் எழுத சென்னை வந்து மறு நாள் படம் பாக்கலாம்னு தியாகராஜா போனோம்.அங்கே தான் சனி,ஞாயிறு ரிசர்வ் பண்ணாம டிக்கட் கிடைக்கும்.சில தடவை படம் பாக்கப்போறப்ப "ஹை சூப்பர்"னு துள்ளலாம் அதும் முத மூணு நாளைக்குள்ள அப்டியாப்பட்ட படம் பாக்றது பெரிய அதிர்ஷடம்னு நினைப்பேன், காதல்,காதல் கொண்டேன் மாதிரி.ஆனா எல்லா தடவையும் நாம நினைக்கிறது நடந்துடுதா என்ன?

மிகவும் சாதாரண அரதப்பழைய கதை, மிக சாதாரண ஏழைப்பையன் தாதாவாகிறான்.தாதாக்களின் கதைகளில் வேறெதுவும் பெரிதாக சொல்ல முடியாது என நினைத்தோ என்னவோ திரைக்கதை பலமாக கட்டப்பட்டிருக்கிறது.முதல் பாதியை செதுக்கியிருக்கிறார்கள்.அட்டகாசம் ஒரு பத்து நிமிடம் படம் போன பிறகு புதுப்பேட்டை என்று டைட்டில் கார்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது.

தனுஷ் ஸ்கூல் யுனிபார்மில் வருவதிலிருந்து அரசியல்வாதியாக மேடையேறுவது வரை குறையில்லாமல் நடித்திருக்கிறார்.தாதா என்பவனுக்கான ஒரு ஆஜானுபாகுவான உருவம் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கேஷிவலாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.ஆக்ரோஷம், சிரிப்பு, கோபம் என எல்லா ஏரியாவிலும் தனுஷ் ஆட்டம் தான்."அம்மான்னா ரொம்ப பிடிக்குமா" என்றதும் லேசாக சிரித்து விட்டு "யாருக்குத்தான் பிடிக்காது?" என்பது அற்புதம்.அதே போல தனியாளாக எதிரிகளிடம் மாட்டி மரண அடி வாங்குவதும் சீறி திருப்பி அடிப்பதும் மிகவும் இயல்பு.தனுஷை சராசரியானவராக காட்டியிருக்கிறார்கள் அதுவும் பலமே, ஸ்நேகாவை விபசாரத்திற்கு அனுப்பக்கூடாது என்பதும்,பிறந்த பிள்ளையை தன் முகம் வைத்து தன் மகன் தானா என பார்ப்பதும், ஸ்நேகா போகிறேன் என்றதும் பணம் வேணுமா என்பதுமாக.

அடுத்தது ஸ்நேகா, நிச்சயம் பராட்ட வேண்டிய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.குடும்பப்பாங்கான அவர் விலைமாதுவாக நடிக்கப்போகிறார் என்றதுமே பல ரசிக நெஞ்சங்கள் வெடித்திருக்கும் (பெண்கள் உட்பட).அதெல்லாம் கண்டு கொள்ளாமல் பொசுக்கென்று அழுவதும், "இப்பவேவா" என தைரியமாக கேட்கும் பெண்ணாகவும் மெல்லிய இயல்புகளை நிறைய இடங்களில் காட்டியிருக்கிறார்.

மற்றும் தனுஷின் அப்பா,கஞ்சா கும்பல் லீடர் அன்பு, அதற்கடுத்த அரசியல் தலைவர்,எதிரி மூர்த்தி,நண்பர்கள் எல்லாருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.நிறைய முகங்கள் அதிகம் இதற்கு முன் பார்க்கப்படாதவை, இனி கவனிக்கப்பட வேண்டியவை.

தைரியமான காட்சிகளும் அதிகம், கெட்ட வார்த்தையில் தாயை ஒருவன் திட்டுவதை காட்டுவது, வெட்டு குத்து,விலைமகள் வாழ்க்கை,ஜன நாயகத்தில் நிகழ்வதை காட்டும் க்ளைமாக்ஸ் இப்படி நிறைய.

டைமிங் ஜோக்ஸ் ஏராளம், கதையோடு இப்படி சேர்க்க செல்வராகவனிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.முதல் தடவை கையை வெட்ட தனுஷை கூட்டிப்போகும் ரவுடி பண்ணும் கமெண்ட்களில் தியேட்டர் அதிர்கிறது.அதுவும் கடைசியாக வேலை முடித்தபின் "கவலைப்படாத மேல உன்னப்பத்தி நல்லா சொல்றேன்" என்பது சூப்பர்.

படத்தின் இசை,திரைக்கதை,காட்சியமைப்பு என எல்லா ஏரியாவும் திருப்தியே ஆனால் கதை ஹிஹி அங்கே தான் சறுக்கலே.தாதாக்களின் வாழ்க்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை ஆமாம் என்கிற மாதிரி காட்டப்பட்டிருக்கிறதே தவிர தாதாக்களின் ஹீரோயிசம் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.
எளிய உதாரணம் தனுஷைத் தவிர வேறு யாருமே துப்பாக்கி உபயோகப்படுத்தாதது, ஆரம்பத்திலேயே தனுஷ் வரிசையாக கொலை செய்ய எல்லோரும் தேமே என இருப்பது,சாவது, போலீஸ் எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் இப்படி மற்ற தாதா படங்களில் என்னென்ன குறைகள் இருக்குமோ அவை இங்கேயும் ப்ரெசண்ட் சார் சொல்கின்றன.

ஸ்நேகா முதல் தடவை ரயில்வே ஸ்டேஷனில் காட்டப்படும்போது விலைமாதுவாக மேக் அப் அப்படி பொருந்துகிறது ஆனால் அப்புறம் எல்லாம் பாந்தமான முகம் தான், அதுவும் விலைமகளாக கொஞ்சம் காட்சிகள் தான் மற்றபடி தாதா மனைவியாக பதிகிறாரே தவிர விலைமகளாக பொருந்தவில்லை, விலைமாதுவின் பிரச்னைகள் அதிகம் சொல்லப்படாததும் ஒரு காரணம். வேறொருவனுடன் இருக்கும்போது தனுஷ் போனில் பேசும்போது நடக்கும் சித்ரவதை காட்டப்படுகிறது, ஆனால் விலைமாதுக்களின் நடைமுறைப்பிரச்னைகள் அதை விட அதிகம் அதுவும் உடலை விட மனம் சம்பந்தப்பட்டவை ஆனால் அவை எதுவும் இங்கே காட்டப்படவில்லை படத்திற்கான ரிசர்ச்சின்போது விலைமகள் பற்றிய சிறுகதைகள் படித்திருந்தால் கூட போதும்.

அதேபோல அதீத வன்முறை காட்சிகள், இப்படிப்பட்ட கதைக்கு இப்படித்தான் எனலாம் ஆனால் தாதாக்கள் வெட்டுவதால் வாழ்பவர்களில்லை வெட்டுவேன் என்று மிரட்டியே வாழ்பவர்கள் அவர்கள் பிரச்னை உயிர்பயம் தான் ஆனால் கிரவுண்டில் நூறு பேரை அநாயசமாக வெட்டுவதெல்லாம் அய்யய்யோ...

எடுத்தவுடனே தனுஷ் எஞ்ஜாய் பண்ணுகிறார் என்று காட்ட எங்க ஏரியா பாடல் இது போன்ற விஷயங்களை செல்வராகவனால் தவிர்க்க முடியவில்லையா? அதிலும் இயல்பாகவே சென்னை பையன்களுக்கு படித்தவர்கள் மீது ஒரு கோபம் உண்டு அதை நயமாக காட்டியிருக்கிறார்களா என்றால் இல்லை அந்தப்பாடலை ஆடியோவில் கேட்டு விட்டு நிறைய எதிர்பார்த்தேன்.சோனியா அகர்வால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார், என்ன கோபமோ? பாடல்களில் இரண்டைத் தவிர வேறெதுவும் காட்சிகளுக்கு தேவையில்லை நீக்கி விடலாம்.இரண்டாம் பாதி நீளம் அதிகம் ஒரு கட்டத்தில் கிளம்பலாமா என்று பேச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன.மூன்றாம் நாளே ஆப்பரேட்டர் இடைவேளைக்கப்புறம் சிலபல காட்சிகளை கட் பண்ண ஆரம்பித்து விட்டார்.

சரி க்ளைமாக்ஸ் பேக்ரவுண்டில் தனுஷ் பேச பொறுமையாக காட்சிகளில் மற்ற நிலைகளை காட்டியிருக்கலாம் தனுஷை நிதியமைச்சராக கெட் அப் காட்ட முடியாது என்று நினைத்தோ என்னவோ ஸ்லைடு போட்டு விட்டார்கள்.

செல்வராகவனிடம் எதிர்பார்க்கப்படுவது மற்ற டைரக்டர்களைப்போல திரைக்கதையில் காட்டப்படும் வெரைட்டியல்ல கதையில் இருக்கும் வெயிட்.படம் முடிந்து வெளியே வரும்போது கூட்டத்தில் என்னை யாராவது குத்தி விடுவார்களோ என்று பயம் தான் வந்தது.

Thursday, May 25, 2006

நகம் வளர்த்தேன் நான் நகம் வளர்த்தேன்

கல்லூரியில் படித்த போது அப்படியொரு நீளமான நகம் வளர்த்திருந்தேன்.காரணம் ச்சும்மா தோணுச்சு வளர்த்தினேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை just to impress others வேறென்ன? அதிலும் குறிப்பாக சில கூடப்படிக்கும் பெண்களை.மற்றும் பலரும் பலவிதமான காரணங்களை சொன்னாலும் கடைசியாக மற்றவர்களை கவருவதில் தான் வந்து நிற்கும்.இப்படி கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே மிக நீளமான நகம் வளர்த்தவர் இப்படி வளர்த்தால் விரல்கள் செயலிழந்து விடும் எனத்தெரிந்தும் வளர்த்தேன் என்று சொன்னதாக படித்த போது வேறென்ன தோன்றும்?

உண்மையில் இதற்கு பலனுண்டு, நிஜமாகவே நிறைய பேரை நம் பக்கம் கவனிக்க வைக்க ஒற்றைத்தோடு, முன் தலை கலரிங், கறுப்பு band ஆகியவை உதவும் அதுவும் நம்மையுமறியாமல் நாம் எதிர்பார்க்காதவர்கள் கூட கவனிப்பார்கள்.அப்படித்தான் என் ஹிட்லிஸ்ட்டில் இருந்த பெண்கள் கவனித்தார்களோ இல்லையோ ஹெச் ஓ டி கவனித்தார்.அப்படியே அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார்.

ஒரே ஒரு தேவைக்காக இம்மாதிரி அசவுகரியங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருப்பது தான் கொடுமை.அதிலும் அம்மாவிலிருந்து யாரென்றே தெரியாத பயணி வரை, “ஏன்ப்பா இப்படி வளர்க்கிறே?” என்பார்கள் ஏதோ சாதனைப்பயணத்தை விசாரிப்பது போல. இப்படித்தான் பக்கத்து வீட்டு சிறுமி கேட்க “அதுவா என்னை யாராவது தொணதொணன்னு கேள்வி கேட்டா கோபம் வந்து அவங்க கன்னத்துல ஒரு கீறு கீறிடுவேன்” என்றேன் முகத்தில் கொஜ்சமும் சலனமின்றி .அதற்கப்புறமும் அவள் என்னிடம் பேசினாள் கொஞ்சம் தள்ளி நின்றே.

உண்மையிலேயே கீறல்கள் விழாமல் இருக்காது அதுவும் கூட இருப்பவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.அதாவது கபடி,நீச்சல் ஆகியவற்றில் முக்கியமாக, முக்கியமின்றி இன்னபிற.தான் பாதிக்கப்படுவதென்றால் நல்ல தூக்கத்தில் கொசுக்கடி மற்றும் மிக அரிதாக சாப்பாட்டு இலையை கவனிக்காமல் கழுவும்போது.அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வது அடுத்த முக்கிய வேலை.சிலர் இதை செய்ய சோம்பேறித்தனப்பட்டு நெயில் பாலிஷ் போடுவதும் உண்டு.

சினிமாக்களில் ஹீரோ யாரும் வைத்திருந்தார்களா நான் பார்த்ததில்லை.ஆனால் நிச்சயம் நீள நகம் வளர்ப்பது தவறு.காரணம் என் நீள நகத்தின் சோக மற்றும் பயங்கரமான முடிவு தான்.மெல்லிய பலகீன இதயமுள்ளவர்கள் முடிவை படிக்க வேண்டாம்.

பேருந்தில் புட்போர்டு போடுவது சிலபஸ்ஸில் இல்லாத கடமை.அப்படி கடைசியாக கல்லூரி ஸ்டாப்பிங்கில் குதித்த போது தான் சுளீர்ரென்று ஒரு வலி தண்டுவடம் தாண்டி வேகமாக மூளைக்கு செய்தி அனுப்பியது.கண்கள் திருப்பினால் பாதி நகம் பழைய அலுமினிய கடைசி ஜன்னலில் சிக்கி கிழிந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.கத்த நேரமில்லை பஸ்ஸை எடுத்து விட்டார்கள் இன்னமும் பாதி நகம் தான் வலித்தாலும் பரவாயில்லை என்று வேகமாக இழுக்க நான் நினைத்தபடியே அப்படியே நக முனை நோக்கி கிழிந்து கையை விடுவித்தேன்.

ஆகவே ஆபத்துகள் நாம் அறியாத திசையிலிருந்து தான் வரும் என்பதை மனதில் கொண்டு நகம் வளர்ப்பவர்கள் யோசிக்கவும்

Monday, May 15, 2006

லாஜிக் லாஜிக் லாஜிக்

தமிழ் சினிமா என்று தனிமைப்படுத்தக்கூடாது, தேசிய அளவிலேயே நம்முடைய லாஜிக் மீறல்கள் அதிகம் அதுவும் சினிமா என்பதை தாண்டி சீரியல்,விளம்பரங்கள் வரை ஒரே காமெடி தான்.நானும் என் மாமாவும் (அதிசயமாக) பொதிகை சேனலை பார்த்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு விளம்பரம், டாக்டர் சொல்கிறார் "நீங்க அப்பாவாயிட்டீங்க" உடனே அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் "ஆ நிஜமாவா" அடப்பாவிகளா என்னய்யா எxபிரஷன் இது.

அதாவது ஹீரோ நூறு பேரை அடிப்பதை எல்லாம் தாண்டி சின்ன விஷயமும் எனக்கு உறுத்தும்.சிறு வயதில் படம் பார்க்கும்போது ஹீரோ ஹீரோயின் பின்னாலேயே சுற்றுவார் அப்போதெல்லாம் இவர் வேலைக்கே போகாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நினைப்பேன்.அதே போல கல்யாண மேடையில் மணமகள் புரட்சியாக கல்யாணத்தை நிறுத்துவது, அப்புறம் நிச்சயமான சில தினங்களில் கல்யாணத்துக்கு வந்த (?!) வேறு யாரோ ஒருவரை காதலிப்பது இதெல்லாமே நான் பார்த்ததேயில்லை (அரிதாக செய்தித்தாள்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்)

அப்புறம் சாதியை எதிர்த்து ஹீரோ பேசும் வசனங்கள் அடப்போப்பா எங்கே ஜாதி இல்ல? திருமணம் முதல் அரசியல் வரை, வலைப்பூக்கள் முதல் டீக்கடை பெயர் வரை எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கத்தான் செய்கிறது ஏதோ இளைஞர்கள் ஜாதியை அறவே வெறுப்பது போல காட்டுவது... இளைஞர்கள் (ஜாதி பற்றி பேச விரும்பாத நண்பர்களை தவிர்த்து விட்டு) தங்களுக்குள் வெகு சாதாரணமாக ஜாதி பற்றி பேசுவதையும் சில ஜாதிகளை திட்டுவதையும் கண்டிருக்கிறேன்.தங்கள் ஜாதியில் வரதட்சிணை எவ்வளவு வாங்குவார்கள் என்பது பற்றி கூட அரட்டை நீளும்.

என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய லாஜிக் மீறல் நிகழ்கிறதென்றால் அது காதலில் தான் பஸ் ஸ்டேண்டிலோ ஏதோ ஒரு கூட்ட நெரிசலான இடத்திலோ பார்க்கிற பெண்ணை அடுத்தடுத்து எப்படி தான் இவர்களால் மட்டும் மீட் பண்ண முடிகிறது? நானும் சென்னையில் எத்தனையோ முறை ட்ரை செய்திருக்கிறேன் 99% ஒரு முறை பார்த்த பெண்ணை மறுமுறை பார்ப்பதரிது.

அப்புறம் மீறிப்போனால் இரண்டே இரண்டு பெண்களைத்தான் ஹீரோ காதலித்திருப்பாராம் (என்ன கொடும சரவணன்?) அதே போல ஹீரோயின் ஒரே ஒருவரைத்தான்.நாமெல்லாம் கணக்கு போட்டா அஞ்சாறு ஆட்டோகிராப் தாண்டுமே

சரி இதக்கூட ஒத்துக்கலாம்யா ஹீரோயினம்மா நம்ம ஹீரோவோட சில பல திறமைகள்ல மயங்கி ப்ரபோஸ் பண்ணுவாங்களாம்.யேயப்பா தமிழ்நாட்டுல எந்த ஊர்லயா நடக்குது இந்த அதிசயம்? நானெல்லாம் கேள்விப்பட்டதே இல்லப்பா அப்டியே நடந்தெல்லாம் அது சப்ப ஃபிகரா இருக்கும் அது கூட ப்ரபோஸ்லாம் பண்ணாது பண்ணினா இவரு ஒகே சொல்ல மாட்டாருன்னு பட்டுன்னு வீட்ல சொல்லி சொந்தத்துல கல்யாணம் முடிச்சிடும்.

அடுத்தது ஹீரோயினோட ட்ரெஸ் (இதுல லாஜிக் மீறல நானும் சில நண்பர்களும் காட்சிக்கு அவசியம் எனில் வைத்துக்கொள்வதில் தவறில்லை என ஒப்புக்கொள்கிறோம் என்றாலும் ;) நிஜத்தில் தமிழ்பெண்கள் அப்படி ட்ரெஸ் பண்ணுகிறார்களா? சென்னை வந்து பார்த்தாலும் அப்படி உடுத்துபவர்கள் எல்லாம் வட நாட்டு பெண்கள் தானே தவிர தமிழ் பெண்கள் மிகக்குறைவே.(அந்த சில நண்பர்கள் கமெண்ட்டில் கை தூக்கவும்)

ஆங்கிலப்படங்களிலும் லாஜிக் மீறல்கள் உண்டு இது இண்டர்நேஷனல் பிரச்னை தான் ஆனால் இதற்கு காரணம் எப்போதும் ரியாலிட்டியோடு வாழும் நமக்கு எண்டர்டைன்மெண்ட் கற்பனையானதாக இருப்பது ஒரு மாறுதல் தரும் என்ற லாஜிக் ஆக இருக்கலாம்.அங்கேயும் ரியாலிட்டியே இருந்தால் எதற்கு தியேட்டர் வரவேண்டும்?

வெகுசில படங்கள் ஈரானிய ஆங்கில டாகுமெண்டரி போல வருவதும் ஹிட்டாவதுமாக இருந்தாலும் "சுத்தமான உணவு எங்கள் சிறப்பம்சம்" என்று சில விடுதிகளில் எழுதியிருப்பார்கள் சுத்தமான உணவு சிறப்பம்சமல்ல அத்தியாவசியத் தேவை அது போல ரியாலிட்டியோடு படம் வருவது ஒரு சிறப்பம்சம் போல விளம்பரப்படுத்தப்படுகிறது வேறு வழி பார்ப்போம் ;)

Tuesday, May 09, 2006

செல்வி சீரியல் நிறுத்தாதற்கு காரணம்?

நேத்தோட தேர்தல் ஜீரம் முடிஞ்சிடிச்சி ஆனா நேத்து அம்மா சொன்ன விஷயம் இது... அந்தம்மா இல்ல எங்கம்மா தலைவா.அதாவது சரத்குமார் ராதிகாவோட அதிமுகவில சேர்ந்ததுக்கப்புறமும் செல்வி சீரியல் நிறுத்தப்படலை, ஏன்னு யோசிச்சு பாத்தா நிறைய அரசியல் தந்திரங்கள் இருக்குன்னு புரியும்.அதாவது அந்த சீரியல் தான் தாய்க்குலங்கள் அதிகம் பார்க்கிறது
பொசுக்குன்னு நிறுத்திப்புட்டா அதுவே ஒரு வகை அனுதாப அலையா மாறியிருக்கவும் வாய்ப்பிருந்தது, அப்டி எதுவும் ஆகிடக்கூடாதுங்கிறது ஒரு காரணம்.

அடுத்து நிறைய திமுக ஓட்டு கேக்குற விளம்பரங்கள் மறைமுக நேரடி பிரச்சார விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சி நடுவில ஒளிபரப்பப்பட்டது. எதிர்க்கட்சியா இருந்தாலும் அதிமுகவாலயோ ராதிகாவாலயோ இத தடுக்க முடியல.தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் தான் எந்த மாற்றமா இருந்தாலும் நடக்கும், சும்மாவா சொன்னாங்க தமிழ் நாட்டு சாணக்கியர்னு.

Thursday, May 04, 2006

லோக் பரித்ரன் வெல்லுமா?

சமீபத்தில் எனக்கு நிறைய உணர்ச்சி வசப்பட்ட நண்பர்கள் லோக் பரித்ரனுக்கு ஓட்டு போட சொல்லும் எஸ்எம்எஸ்ஸை அனுப்பியிருந்தார்கள்... நான் சென்னைவாசியல்ல என்பதை மறந்த என் சென்னை நண்பர்கள்.நாமக்கல்லில் போட்டியிடவில்லை என நினைக்கிறேன்.நேற்று என் சென்னை தோழியும் தான் இக்கட்சிக்கு தான் ஓட்டு போட போவதாக தெரிவித்தாள், "நீ முதலில் ஓட்டு போட போவியா" என்றேன்.

இளைஞர்கள் ஆதரவு இருக்கலாம், ஆனால் இளைஞர்கள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவது போல தெரியவில்லை.இளைஞர் எழுச்சியெல்லாம் ஓல்டு ஃபேஷனாகி விட்டது, இதில் நல்ல விஷயம் மொழி,மதப்பிரிவினைவாதங்களுக்கு இன்றைய சமுதாயம் அடிமையாவதில்லை, யாராவது அப்படி தூண்டினால் கூட எஸ்எம்எஸ் கடி ஜோக் போல சிரித்து விட்டு விலகி போகிறார்கள்.

வயதனவர்களை,பெண்களை ஈர்க்க இது பத்தாது.என்ன தான் நகரம் என்றாலும் அங்கும் நடுத்தர,ஏழை மக்கள் தான் ஓட்டு நிர்ணயிப்பவர்கள் முக்கியமாக ஏழைகளுக்கு ஐஐடியில் படித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்பதை என்ன சொல்லி புரிய வைப்பார்கள்?

அது மட்டுமின்றி ஏதோ தேர்தலுக்காகவே திடீரென்று புறப்பட்ட மாதிரியல்லவா இருக்கிறது? ஒருவேளை கட்சி சார் பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு கூட இதற்கு காரணமாக இருக்கலாம், ஆனால் இந்த இருட்டடிப்பையே சமாளிக்க முடியாதவர்கள் பதவியில் பிரச்னைகளை எப்படி சமாளிக்க முடியும்? (நான் எந்த பத்திரிக்கையிலும் இவை பற்றிய செய்திகள், பிரச்சாரங்கள், பேட்டிகள் படித்ததாக ஞாபகமில்லை)

கடைசியாக ஒன்று மக்களுக்கு நல்லது செய்ய தேர்தலில் ஜெயிக்க நல்லவர்களாக இருப்பது மட்டும் போதாது, மார்கெட்டிங்கில் ஆரம்பித்து பொறுமை வரை நிறைய வேண்டும்.

Monday, May 01, 2006

தேர்தல் 2060

02/05/2060
காலை கொஞ்சம் லேட்டாக தான் எழுந்தான் ராமசாமி என்கிற அந்த இளைஞன் வெளியே பெருங்குரலில் மைக் சத்தம் கேட்டது,குடிசையிலிருந்து வெளியே வந்து பார்த்தான்.கையில் மஞ்சள் நோட்டீஸை ஒரு கரை வேட்டி திணித்தது.அவனுக்கு தெரியும் நகரத்தில் பிரசாரம் வேறு மாதிரியும் கிராமங்களில் வேறு மாதிரியும் செய்யப்படுகிறது,அங்கே டிஜிட்டல் பேனர் இங்கே மஞ்சள் நோட்டீஸ்.முன்பொரு காலத்தில் கருணாநிதி என்கிற தலைவர் "கிராமங்களில் லேட்டஸ்ட் டெக்னாலஜி வாயிலான பிரச்சாரங்களில் ஈடுபடாதீர்கள் நம்மை பணக்கார கட்சி என்று நினைத்து விட வாய்ப்புள்ளது" என்று சொன்னதை மக்கள் மறந்தாலும் எல்லா கட்சிகளும் மறப்பதில்லை.

நோட்டீஸில் பார்வையை ஓட்டினான், காவிரி நதி நீர் 738 ஆவது ஆணையம் அமைக்கப்பட்டு கண்டிப்பாக விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்.வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும்.சடாரென ஒரு தலைவர் வாழ்நாள் முழுதும் இலவச அரிசி வழங்கப்படும் என்றதும் இன்னொரு தலைவர் அரிசி மட்டுந்தானா நாங்கள் சமைக்க தேவையான குக்கர் முதல் மசாலா வரை வழங்குவோம் என்றதும் அவன் நினைவுக்கு வந்தது.

தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும்...பெரிதாக சிரித்தான் எதற்கு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கவா? இவன் கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான் பீஸா டெலிவரி பாயாக.இதே ஆங்கிலம் சரளமென்றால் இன்னும் நல்ல நிலைமை தரும் கால் சென்டர்,பிபிஓ வில் சேர்ந்திருப்பான்.இவன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தான் அப்புறமும் நல்ல மார்க் தான் ஓரளவு நடுத்தர குடும்பமாக இருந்திருந்தால் பெரிய படிப்பு சேர்ந்திருக்க முடியும், ஏழை நல்ல படிப்பில் சேர வகுப்பில் முதல் மாணவனாக அல்ல மாநிலத்தில் முதல் மாணவனாக வர வேண்டும் என அவன் அறிவான்,அந்தளவுக்கு அவன் அறிவாளி அல்லன்.

அப்போதிருந்து இப்போது வரை தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உண்டு, இப்போது வரை மின் இணைப்புகள் தரை கீழ் இணைப்பு தர வேண்டும் என்று எந்த கட்சியும் கூறவில்லை.இதனால் எவ்வளவு உயிரிழப்பு? மழை வந்தால் ஒரே நாளில் ஊருக்குள் வெள்ளம், அதில் மின்சாரம் தாக்கி சில பல உயிர் இழப்புகள்.அதற்கான உள்கட்டமைப்புகளை சரி செய்ய யாரும் வாக்குறுதி தரவில்லை.பொறியியல்,மருத்துவ படிப்புகளுக்கான கட்டணங்கள் மலைக்க வைக்கின்றன, அதை குறைக்க யாரும் முயற்சிக்கவில்லை.அரசாங்க வேலை வாய்ப்பு எட்டாக்கனி, வெளி நாட்டு கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அவர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் மற்ற மாநிலம் தேடி செல்கிறார்கள்,சுய தொழில் புரிய
விரும்புவோருக்கு உடனடி வங்கி கடன்,புற்றீசல் போல கல்லூரிகளுக்கு அனுமதி தராமல் சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்குதல்,சிறந்த சுற்றுலா தளங்களை பாதுகாத்தல்,உருவாக்குதல்,இன்னும் எவ்வளவோ.

ஆனால் இவை எவையும் எந்த கட்சியின் வாக்குறுதியிலும் இல்லை காரணம் மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.ஒவ்வொரு தனி மனிதனும் அவன் பி.எஃப் அவ்வளவு,அவனுக்கு என்னென்ன வசதி என்று தான் பார்க்கிறான் நாடாவது மண்ணாவது.இவர்களுக்கு அரசியல்வாதிகள் எப்படி தீர்வு சொல்ல முடியும் மேற்கண்ட வழிகளை தரலாம் ஆனால் அவை நீண்ட கால திட்டங்கள் மக்களை உடனடியாக கவர தற்காலிக திட்டங்கள் மூலம் அரசியல் அரியணை ஏறிவிட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் இப்படிப்பட்ட மன நிலையில் மக்களும் கட்சிகளும் இருக்கும் வரையில் 2060 என்ன 3060ல் கூட ஏழைகள் குடிசையில் தான் இருப்பார்கள்.அவன் அப்பா சத்தம் போட்டார்,

"டேய் என்னடா வானத்தை பாத்தாப்ல யோஜன? சட்டு புட்டுனு படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு போ இன்னும் ஆறு மாசத்துல நாலு காசு சேப்பம் குடிசைய சரி பண்ணலாம் அப்புறம் மழ காலம், நம்ம வாழ்க்கை நம்ம கையில மட்டுதான்"

குறிப்பு: வலைப்பதிவர்களுக்கான மாதாந்திரப்போட்டிக்கு இப்பதிவு அளிக்கப்பட்டுள்ளது,இதே போன்ற மற்ற நண்பர்களின் பதிவுகளைக் காண இங்கு க்ளிக்கவும்.மே 21 முதல் 25 வரை ஓட்டெடுப்பு நிகழும் (இது ச்சும்மா ஒரு இன்ஃபர்மேஷனுக்கு மட்டுந்தான் ஹி ஹி)

Thursday, April 27, 2006

எல்லாரும் அரசியல்வாதிங்க தானே...

சமீபத்துல வைகோ எங்க கூட்டம் போட்டாலும் அங்க யாராவது ஒருத்தர் எந்திரிச்சி "அம்மா கிட்ட எவ்ளோ தலைவா வாங்கினீங்க?" என்றோ "40 கோடி என்ன பண்ணீங்க தலைவா" என்றோ டார்ச்சர் பண்ணிய விஷயம் தினசரி ஏடுகளில் (தினகரனில் பெருசா...) வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.அவரு எவ்ளோ கடுப்பாகிருப்பாரு? அது உண்மையோ என்னவோ அத்த விடுங்க (அதான் நினைச்சிருப்பாரு ஒரு வேளை காசு கொடுத்து எதிர்க்கட்சி சதியோன்னு அதுக்காக இவரும் சதி செஞ்சோ என்னவோ) நேத்தோ, முந்தா நேத்தோ கருணாநிதி பிரச்சாரம் பண்ணும்போது,"தலைவா சன் டிவி வெச்சு கோடி கோடியா சம்பாதிக்கிற... எனக்கு (?!) எதுமே தர்லியே" என்று நேரிடையாக கேட்டிருக்கிறார், வைகோ போல கருணாநிதி பொறுமையாக பேசவெல்லாம் இல்ல... கில்லியில் வருவது போல "யேய் யார்யா அது தூக்கு அந்த ஆள" என்று கட்டளை பறக்க 'தொண்டர்'களால் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்.

(ஒரு வேளை ஆள் ஏற்பாடு பண்ணி செய்யப்பட்டிருந்தால்) இதெல்லாம் தேவையா...? எல்லாரும் அரசியல்ல இருக்கும்போது ஒருத்தர் மட்டுந்தான் கேள்வி கேக்க முடியற நிலையா/ ஏற்கனவே இதே ஸ்டைல்ல பதவி விலகற பிரச்னையை ஆரம்பிச்சு அது எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தத பாத்தும் இப்டி உள்குத்து வச்சுக்கலாமா?

அப்புறம்...பேசாம மக்கள்ல ஒருத்தரே இப்டி ஏதாவது அப்பப்ப பண்ணினா எதிர் கட்சிக்காரன் தான் பண்ணினான்னு ஒவ்வொரு கட்சியும் ஆள் வச்சு மக்களுக்கு நல்லது பண்ண மாட்டாங்க? (மாட்டாங்க!) இத ஒரு ப்ளானா ஹீரோ செயல்படுத்தி முதல்வராகிற கதைக்கு ஆயுள் தடை விதிக்கிறேன் (அட்லீஸ்ட் என் ஆயுள் வரை)

Sunday, April 23, 2006

சேவைக்குறைபாடு

நேற்று செல்பேசி ரீசார்ஜ் செய்ய டாப் அப் கார்டு வாங்கினேன், ரீசார்ஜ் செய்தால் "other error" என்றது, நான் சந்தேகப்பட்டது போலவே கடைக்காரர் கேட்டார்,"எந்த ஊர்ல சிம் வாங்கினீங்க?" "சென்னை" நாட்டாமை 'செல்லாது செல்லாது' என்பது போல விளக்கம் தந்தார்,"சென்னைல வாங்கினா ரீசார்ஜ் கூப்பனும் அங்க வாங்கணும் அது தான் வேலை செய்யும் தமிழ் நாட்டில வாங்கின கூப்பன் ஆகாது" என்றார்.யேய் என்னய்யா இது சென்னை வேற தமிழ் நாடு வேறங்கிற மாதிரியே பேசுறன்னு நினைச்சேன்.சரி ஒரு மாசம் டாக் டைம் இருக்கே அது வரை உபயோகிப்போம்னு சென்னையில் இருக்கும் நண்பனுக்கு பணம் போட ஐசிஐசிஐ பேங்க் போனேன்.

நண்பனிடம் அவன் பேங்க் அக்கவுண்ட் நம்பரும் பெற்றிருந்தேன், 12 மணியோடு மூடி விடுவார்கள் இன்னும் கால் மணி நேரமே இருக்கும் என்ற நிலையில் படிவம் நிரப்பி கொண்டு போய் தந்தால் "இது அக்கவுண்ட் நம்பரே இல்லை ஐசிஐசிஐயில் 15 இலக்கம் இருக்கும் பாருங்கள் 12 தான் இருக்கிறது" என்றார்."ஓ அப்படியா எனக்கு ஐசிஐசிஐ பத்தி தெரியாது, சரி கண்டிப்பா தெரியும் தானே இது தப்பான நம்பர்னு?" என்றேன், தலையை வித்தியாசமாக ஆட்டினார், அப்போதே டவுட் ஆனேன்...நான் நினைத்த மாதிரியே என் நண்பன் அப்புறம் (இரவு தான் லைன் கிடைத்தது) சொன்னான்,"டேய் அந்த 12 நம்பருக்கு முன்னாடி மூணு சைபர் சேக்கணும்டா பேங்க்லயே சொல்லுவாங்களே"

இந்தியாவில் கஸ்டமர் கேர் என்பதே அரிதான வார்த்தையாக இருக்கிறது, இங்கே கவனிக்க வேண்டியது என் பிரச்னையல்ல அதன் வீரியம் குறைவாகக்கூட இருக்கட்டும், அலட்சியம் தான் எனக்கு அதிருப்தியை தருகிறது.அதுவும் சில கெட்ட தினங்களில் இப்படி தொடர்ச்சியாக. தனிப்பட்ட முறையில் இனி வழக்குகள் போட்டு தாக்கப்போகிறேன் (அக்கா பி.எல் கடைசி வருடம் படிக்கிறார்...ஹி ஹி)

Wednesday, April 19, 2006

ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்

சமீபத்தில் ஹேரீஸ் ஜெயராஜின் வேட்டையாடு விளையாடு பாடல்கள் கேட்டேன் 'மஞ்சள் வெயில் மறையுதே' பாடல் எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்று திரும்ப திரும்ப யோசனை.அது அலை பாயுதேவில் வரும் 'என்றென்றும் புன்னகை' போல் இல்லை? அதுவும் சின்ன தாளம் கூட அப்படியே.

'பார்த்த முதல் நாளே' கூட 'சுட்டும் விழிச் சுடரே'வின் மேக் அப் தான். யுவன்,ஹேரீஸ் இருவருமே தேவாவின் கலையுலக வாரிசுகள் ஆக முயற்சிக்கிறார்கள் நல்லதில்லை.... பாட்டு ஹிட் ஆகிறது மட்டும் முக்கியமில்ல.... ஒன் பாத்ரூமுக்கும் தான் ஓட்றான் ஓட்டப்பந்தயத்துக்கும் தான் ஓட்றான் வித்தியாசமிருக்கில்ல?

இத கண்டுபிடிக்கிறதுல தான் என்னா சொகம்...(யார்பா அது... நிலா நதில வர்ற கவிதைகள்ல நிறைய பூக்காட்டில ஏற்கனவே எழுதினது இது ரிப்பீட்டு இல்லையான்னு கேக்குறது... மூச்)

Tuesday, April 18, 2006

தொலை நோக்கு பார்வை-ஜாலி பேட்டி

சரத் குமார் அதிமுகவில் இணந்த கையோடு அளித்த பேட்டி (கொஞ்சம் கற்பனை கலந்து) :

"திமுகவிலிருந்து விலகிய காரணம்?

அங்கே குடும்ப அரசியல் நடக்கிறது மற்றும் அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை.

தொலை நோக்கு பார்வை இல்லை என எப்படி சொல்கிறீர்கள்?

நேற்று சேப்பாக்கத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி இருந்தார்கள் அவர் கோமள வல்லி என மனசாட்சியே இல்லாமல் பெயர் வைத்திருக்கிறார்.இப்போதே இந்தப்பெயர் படு ஓல்டு பேஷன் இன்னும் இருபது வருடங்கள் கழித்து அந்த பெண் குழந்தை தன் தந்தையிடம் "ஏம்ப்பா நேக்கு இந்த பேர் வச்சேள்?" என்று அபிதா ரேஞ்சுக்கு அழும் என நினைத்துப் பார்த்தாரா? இதிலிருந்தே தெரியவில்லையா அவருக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என? இவ்வாறு தெரிவித்தார். மற்றும் அருகிலிருந்த ஜெ. இடை மறித்து "கருணாநிதி கிட்டப்பார்வை இருப்பதால் கண்ணாடி அணிந்திருக்கும்போது தொலை நோக்கு பார்வை எப்படி இருக்கும்?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடியாக கருணாநிதி அளித்த பேட்டி:

உங்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என சரத் கூறியிருக்கிறாரே?

"சினிமாவில் இறங்கிய காலம் முதலே மன்னாதி மன்னனில் எம்ஜிஆருக்கு இடுப்புக்கு கீழே இழையோடும் இலைகள் போன்ற பேஷனை யோசனை செய்தவன் நான் என்பது வரலாறு.
கோமள வல்லி என்பது இருபது வருடம் கழித்து பேஷனாகும் என்ற தயாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கியே அப்பெயர் சூட்டப்பட்டது அவர்களது கொக்கரிப்புக்கு காலம் பதில் சொல்லும் என்பதை அறிந்து கொள் கழகக்கண்மணியே"
அருகில் தயாநிதி இடைமறித்து,"கிட்டப்பார்வை இருப்பவர்களால் தூரத்தில் தான் பார்க்க முடியாதே தவிர தொலை நோக்கு என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இது கூட தெரியாதவர் தான் ஆட்சியில் இருக்கிறார் மற்றும் (வழக்கம் போல) இத்தனி நபர் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் மான நஷ்ட வழக்கு போடப்படும்" என பயமுறுத்...சே பதில் சொன்னார்.

Sunday, April 16, 2006

போலீஸ் எப்போது திருந்துவார்கள்

சமீபத்தில் நாமக்கல்லில் இருக்கும் ஒரே ஒரு சிக்னலில் நின்றபோது சென்னை ஞாபகம் வந்தது.வெள்ளுடை வேந்தர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.முதல் கூத்து: ஸ்பென்சர் பிளாசா அருகில் ஒரு ட்ராபிக் போலீஸ் வரிசையாக வண்டிகளை கப்பம் கட்ட நிறுத்திக் கொண்டிருந்தார் எங்கள் வண்டியை நிறுத்தி "ம்ம் எடுங்க" என்றார்.என் நண்பன் அவர் பல்ஸ் உணர்ந்தவனாக டிரைவிங் லைஸன்ஸ் எடுக்காமல் 50 ரூபாய் எடுத்தான்.அவர் "ஓகே சார் நீங்க போலாம்" என்றதோடு நில்லாமல் பக்கத்தில் பணம் தர முடியாது என போராடுபவனை பார்த்து "பாருய்யா வந்தாரு 100 ரூபா குடுத்தாரு போறாரு நீ என்னடான்னா..." அவனை நம்ப வைக்க மறுபடியும்,"100 ரூபா தானே ஸார் தந்தீங்க?" "ஹி ஹி ஆமா"

ரெண்டாவது கூத்து: தி. நகர் சிக்னல் அருகே வழக்கம் போல வசூல் வேட்டை என் நண்பன் மாட்ட அப்போது பார்த்து அவனிடம் பணமில்லை,"சார் பணமில்ல சார் நாளைக்கு தரேன் சார்" "தோடா டிரைவிங் லைசன்ஸ் குடுத்துட்டு நாளைக்கு வாங்கிக்க" "சார் ப்ளீஸ் சார்" கொஞ்ச நேரம் போராட அவர் மனமிறங்கி "சரி எவ்ளோ வெச்சிருக்க" "சில்லரை தான் சார்" "எடுய்யா" மொத்தமாக எட்டு ரூபாய் அல்பம் அப்புறம் தான் விட்டது இவன் அதை விட அல்பம் "சார் எல்லாம் தந்துட்டேன் தம்'முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்களேன்"

மூன்றாவது கூத்து: உதயம் தியேட்டர் பக்கம் சடாரென வண்டி நிறுத்தப்பட அந்த கடமை தவறாத அதிகாரி ஒரு பேச்சுக்கு கூட வேறெதுவும் கேட்கவில்லை "50 ரூபா எடு" நம்மாளு கோபமா "போன சிக்னல்ல இப்ப தான் சார் அழுதுட்டு வரேன்" என்று கதை விட்டான் "ஓ அவரு வாங்கிட்டாரா இன்னிக்கு வாங்கக்கூடாதே சரி சரி கிளம்பு"

Thursday, April 13, 2006

நோயாளியிடம் எப்படி பேச வேண்டும்

முந்தாநாள் அம்மா திடீரென வயிறு வலிக்கிறது என்று சொல்ல டாக்டரைப் பார்க்க அடுத்த 20 நிமிடங்களில் பெட்டில் சேர்த்து குளூகோஸ் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.அம்மாவுக்கு கிட்னீ ஸ்டோன்,நான் பொறுமையாக சிறு நீரகக்கல்லின் எல்லா விவரங்களையும் சொல்லி அம்மாவின் டென்ஷனை குறைத்துக் கொண்டிருந்தேன்.ஏற்கனவே என் நண்பன் ஒருவனுக்கு இப்பிரச்னை இருந்ததால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு எனக்கு (கடவுள் புண்ணியத்தில்) இருந்தது.அவனுக்கு இவ்வளவு சின்ன வயதில் வந்ததற்கு காரணம் ஹாட்டை ராவாக மிகக்குறைந்த நேரத்தில் அடித்துக்காட்டும் சாதனையை பலமுறை நிகழ்த்தியது தான்.இப்போது அதைத் தொட்டால் போதைக்கு முன்னால் எமன் வருவான் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருப்பதால் டாஸ்மாக் அவனுக்கு எதிர்ச்சொல்.

ஸ்கேன் செய்ய அங்கிருந்த லேப் போனோம் ரிப்போர்ட்டை சோதித்த டாக்டர் பெண் கேட்ட முதல் கேள்வி, "எப்டி இவ்ளோ நாள் இருந்தீங்க?" அடப்பாவிகளா ஏற்கனவே அவதில இருக்கிற நோயாளி கிட்ட இப்டியா பேசறது...முறைத்தேன் கேள்வியின் விபரீதம் புரிந்தவராய் "அதாவது...இவ்ளோ பெரிய கல் இருக்கே பிரச்னைன்னு டாக்டர்கிட்ட வராம எப்டி இவ்ளோ நாள் இருந்தீங்க இவ்ளோ நாள் ஏன் வரலைன்னு கேட்டேன்" என்றார்.அம்மா சற்றே ரிலாக்ஸ் ஆனார்.அதற்குள் சொந்தக்காரர்கள் வந்து விட்டார்கள், அம்மாவை அப்போது தான் தூங்க வைத்திருந்தோம் கொஞ்ச நேரம் காத்திருந்த அத்தை அதற்கு மேல் தாங்காது என்று ,"ஏ புள்ள எழுந்திரு" என்றார் ஆஹா எல்லாமே கடுப்படிக்கிறார்களே ஸாரிம்மா உனக்கு பயங்கர கெட்ட நேரம் தான் என நினைத்துக்கொண்டேன் பேச்சு வாக்கில் அத்தை சொன்னார்,"இதே மாதிரி தான் தம்பி ரெண்டு மாசம் மின்னாடி எங்க மாமனார சேத்திருந்தோம் வயித்து வலின்னு இதே ஆஸ்பித்திரில தான் ஏதேதோ பண்ணாங்க ம்ச் காப்பாத்த முடியல" அம்மா என்னை பாவமாக பார்த்தார் "அதெல்லாம் ஏன் அத்தை இப்போ பேசிக்கிட்டு?"என்றேன். "ஆமால்ல, பேச்சு வாக்கில சொல்லிட்டேனப்பா" இதே ரீதியில் மூன்று உறவினர்கள் பீதியை கிளப்பி விட்டார்கள். நோயாளியிடம் என்ன பேச வேண்டும் என்பதே பலருக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யமூட்டும்(?!@!) வேதனை.

Monday, April 03, 2006

ரயில் ரிசர்வேஷன் கட்டண உயர்வு யாருக்கும் தெரியுமா

சுமார் மூன்று நாட்களுக்கு முன் தினத்தந்தியில் நான் படித்த செய்தி இது
புறப்படும் இடத்தை தவிர வேறெங்கு இருந்து ரிசர்வ் செய்தாலும் முப்பது ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும்.அதாவது சென்னையிலிருந்து மதுரை செல்ல மதுரையில் ரிசர்வ் செய்தீர்களானால் முப்பது ரூபாய் அதிகம் தர வேண்டும்.ஆனால் சென்னையிலேயே செய்தால் இக்கட்டணம் இல்லை (குழப்பவில்லையே...?) .இது நடைமுறைக்கு வந்து விட்டதா என்று எதுவும் தெரியவில்லை,உங்களுக்கு காட்ட தினத்தந்தி மின்னிதழில் தேடினேன் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை .நீங்கள் கண்டு பிடித்தால் கமெண்ட்டில் இடலாம்.
இது நிறைய குழப்புகிறது
1.ரிட்டர்ன் டிக்கட் எடுத்தாலும் இக்கட்டணம் தரவேண்டும் என்பது நியாயமா
2.என் ஊர் நாமக்கல் அங்கிருக்கும் ரிசர்வேஷன் கவுண்ட்டரில் எந்த ஊருக்கு பதிவு செய்தாலும் இக்கட்டணம் தந்து தொலைக்க வேண்டுமா
3.இன்டர் நெட்டில் பதிவு செய்தாலும் தரவேண்டுமா (இன்டர் நெட்டில் எங்கிருந்து பண்ணினால் என்ன? இல்லை சின்சியராக ஐ பி அட்ரெஸ் நோட் பண்ணுவார்களா?)

Saturday, April 01, 2006

தமிழ் நாட்டு மக்கள்னா ரெண்டு கட்சிக்கும் நக்கலா போச்சு

அட ஆமாங்கறேன் இன்னிக்கு காலைல பேப்பர தெறந்தா சிம்ரன் அதிமுகவுக்கு ஆதரவுன்னு போட்டிருக்கு,திமுக என்னன்னா கலர் கலரா கத விடுறாங்க,நாம என்ன சொன்னாலும் வேற வழியில்ல இந்த ஜனங்களுக்குன்னு நினைக்கிறாங்க போல...

வேண்ணா பாருங்க இந்த தடவை விஜய காந்த் ஒரு கலக்கு கலக்க போறாரு
முதல் நல்ல விஷயம் மத்த கட்சிகளை விட நட்சத்திரக் கூட்டம் அங்க கம்மி தான்.கம்மி என்ன அவரு மட்டுந்தான்.இப்பல்லாம் பரவாயில்லியப்பா, நல்லா தான் பேசுறாரு "பாவம்யா நாமளாவது போடுவோம்"ன்னு எல்லாரும் நினைச்சாலே சோலி முடிஞ்சுது.

அதே மாதிரி சன் நியூஸ்ல வைகோ ஒரு குடும்பம் எல்லா மீடியாவயும் ஆக்ரமித்திருக்கிறதுன்னதுக்கு பதிலடியா ஒவ்வொரு பத்திரிக்கையும்,அரசியல் வாதியும் வச்சிருக்கிற மீடியா கம்பெனிகள காட்டுச்சு தெரிஞ்ச விஷயம் ரெண்டு...எல்லாரும் தப்பு பண்றான் நானும் பண்றேன்கிற கடுப்பேத்தற மனோ பாவம், அடுத்தது ஆமண்ணே எல்லாரும் ஃபிராடுப்பயலுவ தான்.இப்டி குறை சொல்றேன்னு உண்மைய உடைச்சிக்கிட்டிருக்கானுவ கடைசில இருக்கிறதிலயே நல்லவரு கேப்டன் தான்னு தனிப்பெரும்பான்மை கிடைக்கப் போகுது இல்லாட்டியும் கூட கூட்டணி ஆட்சி அமைக்கவாச்சும் வாய்ப்பு கிடைக்கப்போகுது

குறிப்பு: நேற்று இங்கே எழுதியதற்கு பிராயச்சித்தமாகவோ அவர்கள் கட்சியில் போன் வந்தது என்றோ இப்படி எழுதுகிறேன் என தவறாக நினைக்க வேண்டாம் ஹி ஹி

இன்னொரு வலைப்பூ

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நான் என்னங்க பண்றது? அதிசயமா இன்னிக்கு ஒரு கவித தோணிச்சு பூக்காடு இயல்பு வாழ்க்கை பத்தி எழுதற இடமா மாறிட்டதாலயும், கவிதைகளுக்குன்னு ஒரு சைட் வேணும்னு நினைச்சதாலயும் நிலா நதின்னு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுட்டேன்.டெடிகேட் பண்ணனும்னா என் ஆபீஸ்ல என் கவிதை நோட்ட படிச்சுட்டு வாலி வைரமுத்து ரேஞ்சுக்கு என்ன மதிக்கற அனுங்கிற (அப்பாவி) பொண்ணுக்கோ, என் ஒவ்வொரு கவிதைய படிக்கிறப்பவும் பாராட்டுறானோ இல்லையோ ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்புன்னு சளைக்காம சொல்ற அறை நண்பன் மனோஜுக்கோ டெடிகேட் பண்ணலாம் ஆனா அது ஓவரா இருக்கும்.

ஆரம்பிச்சு நாலு நாளாகுது என் வலைப்பூக்களில் கன்டென்ட் தவிர மற்ற இடங்களையும் கவனிப்போருக்கு தெரியும்.இதுக்கு முன்னாடி ஒரு இங்கிலீஷ் தளம் ஆரம்பிச்சியே என்னாச்சுன்னு கேக்குறீங்களா? ஐடியா ஸ்பார்க் ஆனா செயல்படுத்த வேண்டியது தான் ஜெயிக்காதுன்னா டெலிட் தான், ஆனா இது அப்டியாகாது, அதுக்கு பதில் வேறொரு ஆங்கில தளத்த ஆரம்பிச்சிட்டேன் rainy day coffeeன்னு பேர் வச்சிருக்கேன் இன்னும் பதிவிட ஆரம்பிக்கல

Friday, March 31, 2006

ஒரு மெயிலில் ஷூட் பண்ணுங்கள்

நான் இனியதளம் ஆரம்பித்ததிலிருந்து தான் இதை செய்ய ஆரம்பித்தேன் சேவை வழங்கு தளங்களில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அது இலவச சர்வீஸ் என்றாலும் கூட சேவை வழங்குவோருக்கு ஒரு மெயில் மூலம் தன்மையாகவோ காட்டமாகவோ ஒரு மெயில் அல்லது அவர்கள் தளத்திலியே படிவம் இருக்கும் அதில் எழுதுங்கள் அது மிகவும் குழந்தைத்தனமான சந்தேகமாக இருப்பினும் கூட. நிச்சயம் இரு வேலை நாட்களுக்குள் உங்களுக்கு பதில் தருவார்கள்.

அச்சேவையை முன்னேற்றுவது பற்றியும் கூறலாம், உங்கள் ஆலோசனை சிறப்பானதெனில் சில நேரங்களில் அவர்கள் விழாக்களுக்கு கூட அழைப்பு வரும் அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை அவ்வளவு அருமையானது.

Thursday, March 30, 2006

ஜெயலலிதா இப்படியும் அறிக்கை விடலாம்

கருணாநிதி குங்குமம் சர்குலேஷன் அதிகப் படுத்து போல நினைத்து 2 ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி என அள்ளி விட்டிருக்கிறார்.இதை சமாளிக்க ஜெயலலிதா இப்படியும் அறிக்கை விடலாம்

1.ஏழைகள் எல்லோரும் நடுத்தர வர்க்கத்திற்கு ‘அப்கிரேட்’ செய்யப்படுவார்கள். 2.வாழ்க்கையின் இன்றியாமையாத்தேவைகளான செல்போன், ஐபாட், ஷூ, கூலிங் கிளாஸ் மற்றும் பல இலவசம்
3.கோடை வெயிலை சமாளிக்க ஸ்விட்ஸர்லாந்துக்கு இலவச சுற்றுப்பயணம்
4.சென்னை முழுக்க சென்ட்ரலைஸ்டு ஏசி
5.கருணாநிதி பாசக்கிளிகள் மாதிரி படங்களில் பங்களிப்பதை தடுக்க கைது செய்யப்படுவார்
6. திருமணமாகாமல் தவிக்கும் ‘ஆண்’களுக்கும் திருமண உதவித் தொகை
7.மாணவர்களுக்கு தினமும் கோழி பிரியாணி
8. நிலமற்ற ஏழைகளுக்கு 10 ஏக்கர் நிலம் ( நிலம் தீர்ந்து போனால் கடலை வற்ற வைத்து அந்த இடம் கொடுக்கப்படும்)
9.பாஸ்போர்ட் அப்ளை செய்த அனைவருக்கும் அமெரிக்க ஹெச் 1 விசா (அல்லது அவர்கள் விரும்பும் நாட்டிற்கு)
10.எல்லா பண்டிகைகளுக்கும் அதை கொண்டாட தேவையான பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படும் (உதாரணம் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடை பொங்கலுக்கு சட்டி, விறகு, சர்க்கரைப் பொங்கல்)

Tuesday, March 28, 2006

சின்ன மலரும் நினைவு

இன்னும் மூன்று நாட்களில் தொழில் ரீதியான வாழ்க்கைக்கு விடுமுறை தரப்போகிறேன்.சென்னைக்கு வந்தபோது "வைரமுத்து கட்டிடக்காடு என்றாரே" அதற்குள் தொலைந்தது போல் இருந்தது.மாதம் ஒரு அறை,அப்போது தான் பழக ஆரம்பித்திருப்பேன்...அதற்குள் வேறு அறை மாறுவோம்.சுமார் எட்டு மாதங்கள் வேலையே கிடைக்கவில்லை கடுப்பாகி விட்டேன்.

ஆனால் நின்று ரசித்து சிரிக்காமல் ஒரு கணமும் கழிந்ததில்லை.அப்போது சதர்லேண்ட் கம்பெனி இன்டர்வியூ நுங்கம்பாக்கத்தில் வாராவாரம் நடக்கும்.எங்களுக்கு அங்கே தான் இன்னும் பல நேர்காணல்கள் பற்றி தகவல் சொல்லும் புது நண்பர்கள் கிடைப்பார்கள். அங்கே முதலில் ஒரு டேப்பை ஓட விடுவார்கள் அப்புறம் அது சம்பந்தமாக கேள்விகள் வரும் இது மிக எளிமையானது மிகக்குறைந்த அளவிலேயே வெளியேற்றப்படுவார்கள்.அடுத்தது கிராமர்
இப்படியாக எல்லோரும் வெளியே வந்து விட்டோம், எங்கள் ஒரே ஒரு அறை நண்பன் மட்டும் கடைசி வரை தாக்கு பிடித்தான்.கடைசியில் அவனுக்கும் தோல்வியே மிஞ்சியது

எனக்கு புரியவில்லை ஏனென்றால் ஆங்கிலம் தான் கடுமையான சுற்று அதிலேயே தப்பியவன் பர்ஸனல் இன்டர்வியூ எளிமையானது எப்படி விட்டான்? அவனிடமே கேட்டேன் சொன்னான்:

“ஒண்ணுமில்லீடா ‘டெல் அபவுட் யூ’ன்னாங்க ஐ ஆம் சத்தியமங்கலம் ஃப்ரம்
பழனிச்சாமின்னேன்”

Monday, March 27, 2006

இன்னும் ஒரு வாரம் தான்

இன்னைக்கு ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்துட்டேன், அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சம்பிரதாயம்லாம் பண்ணினதில்லையா அதான் தேடி பிடிச்சி காப்பியடிச்சேன். நீட்டி முழக்கி ரெண்டு பத்தி எழுதினேன்.பேசாம முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்ஸன் மாதிரி தந்திரலாம்.இன்னும் ரெண்டு மாசம் சொந்த ஊர் போறேனே ஹைய்யா
அப்ப... வலைப்பூ... அஸ்க்கு புஸ்க்கு அதெல்லாம் கண்டிப்பா இருக்கும் அவ்ளோ ஈஸியா தப்பிக்க விட்டுடுவேனா?

Thursday, March 23, 2006

வாஷர்மேன்பேட் / வண்ணாரப்பேட்டை

ஆங்கிலத்தில் பெங்களூர்ட் என்கிற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது.

சைக்கில், றூமற், ப்லே, ளாறி,ஸ்கூட்டற் இவை பார்க்கவே ஏதோ மாதிரி இருக்கிறது இல்லையா, அப்புறமென்ன நமக்கே தெரியாமல் இவற்றை ஏற்றுக்கொண்டோம் தமிழாக, என்று தானே அர்த்தம்.அதுவும் சென்னையில் கொஞ்சம் ஓவற் "பேட்டையை பேட் என்று சொல்" என எந்த இங்கிளீஷ் வாத்தியார் சொன்னாரோ தெரியவில்லை.சைதாப்பேட், புதுப்பேட், கொற்க்குப்பேட் என்று கொலை செய்கிறார்கள், அது கூட பரவாயில்லையப்பா திருவல்லிக்கேணி எவ்வளவு அழகான பெயர்? ஏன் ட்ரிப்ளிகேன் ஆனது?

உடனே ஒரு கதை சொல்வார்கள் திருவல்லிக்கேணி ஆங்கிலேயனுக்கு உபயோகிக்க கடினமாக இருந்தது அதனால் அப்படி மாறி விட்டது சரி அதற்காக அரசாங்க கோப்புகளில் கூடவா? யாரோ செய்த தவறை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

சரி இது கூட சற்று ஏற்புடைய வாதமே எந்த ஆங்கிலேயன் தமிழ் புரிந்து கொண்டு அழகாக வாஷர்மேன்பேட் என்று வைத்தான்? வண்ணாரப்பேட்டையை எவ்வளவு சிரத்தை எடுத்து ஆங்கிலப்படுத்தி இருக்கிறார்கள் இன்னும் உண்டு லிட்டில் மவுண்ட், ரெட் ஹில்ஸ் (அட அட) எனக்கு தெரிந்து தமிழ் இத்தனை வகைப்படும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, கேரளா, சிங்களம், மலேசியா, சுக்வீந்தர் சிங்.

Tuesday, March 21, 2006

உங்கள் மொபைல் திருட்டு போனால் போலீஸ் கண்டுபிடிக்கும்

வரவர சென்னையில் நடக்கும் சம்பவங்களைக் கேட்டால் காதில் தேன் பாய்கிறது இனி மேல் இன்ஷ்யூர் பற்றி கவலைப்பட தேவையில்லை IMIE எனப்படும் ரகசிய எண்ணை மட்டும் குறித்துக்கொண்டால் போதும் அதை போலீஸிடம் கம்ப்ளைன்ட்டாக கொடுத்தால் அந்த செல் கண்டு பிடித்து தரப்படும் என்கிறது இரண்டு நாள் பழைய நியூஸ் பேப்பர், அதுவும் கம்ப்ளைன்ட்டை cop@vsnl.net-க்கு இமெயில் பண்ணினால் போதுமாம்.என்னமோ நடக்குது உலகத்துல

அந்த நம்பரை காண என் நண்பன் ஒரு வழி சொன்னான் *#06# என்று ப்ரெஸ் பண்ணவும் அந்த எண் கிடைக்கும் நான் நோக்கியா 1100வில் டெஸ்ட் செய்தேன் 15 இலக்க நம்பர் கிடைத்தது ஒன்றும் பயப்படத் தேவை இல்லை மற்ற மொபைல்களுக்கு எப்படி என்று தெரியவில்லை

Monday, March 20, 2006

ஐபாட் வாங்கலியோ ஐபாட்

சமீபத்தில் பத்திரிக்கைகளில் அல்லது உங்கள் நண்பர்கள் யாரும் டிஎஸ்சி (என்னை வம்பில் மாட்டி விட்டுடாதீங்க?!@) கம்பெனியில் இருந்திருந்தால் அங்கே ஒரு வருடம் வேலை செய்தவர்களுக்கு ஐ பாட் எனும் மல்டிமீடியா கருவி இலவசமாக தரப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அப்படி எங்கள் ரூமிற்கும் ஒரு ஐபாட் வந்தது. ஏதோ வேற்று கிரகத்திலிருந்து கிடைத்த பொருள் போல பார்த்தோம்.இப்போது தான் அது பற்றி நெட்டில் தேடி நண்பனுக்கும் எனக்கும் புரிய வைத்துக் கொண்டேன்.அவன் நேற்று கேட்டான், “உனக்கு வேணுமா இதே மாதிரி என் கொலீக்குக்கு கொடுத்த ஐபாட்? பதினாலாயிரம் தான்” அதன் விலை 24000 என்று அறிந்தேன் “ஆமா அத அவனுக்கு பிடிக்கல அவன்ட்ட இது வேணுமான்னு கம்பெனி டிஸ்கஸ் பண்ணவுமில்ல நிறைய பேர் விக்கலாம்னு இருக்காங்க” என்றான். நியாயந்தான், நமக்கு பாட்டு கேக்க எஃப் எம் போதுமப்பா பனிரெண்டாயிரம் செலவு பண்ணனுமா, ஐபாட் வேண்டும் என்பவர்கள் தங்கள் நண்பர் வட்டத்தில் விசாரிக்கவும்.

Friday, March 17, 2006

அறிவியல் தமிழா / தமிழாக்கமா?

வலைப்பூக்கள் இந்தியாவிலும் பிரபலமாக ஆரம்பித்து விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி அதுவும் தமிழில் பிரமிக்கும் வளர்ச்சி. என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் பெரும்பாலான பதிவர்கள் ஏதோ விதிக்கு (ரூல்) கட்டுப்பட்டது போல சுத்தத்தமிழில் எழுதுகிறார்கள்.எனக்கு
அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும் அவ்வப்போது முயற்சிப்பேன்.இது நல்லதே எனினும் சில பல நேரங்களில் எனக்கு நிறைய வார்த்தைகள் புரியாது அந்தப்பதிவின் ஓட்டத்தை வைத்தே
புரிந்து கொள்வேன் நல்ல உதாரணம் மறு மொழி மட்டுறுத்தல்.முதன் முதலாக இதை படித்த போது கமெண்ட் மாடரேஷனைத்தான் சொல்கிறார்கள் எனப் புரியவே இல்லை (ஆங்கில பெயர்ப்பை கவனிக்காதும் இருந்திருப்பேன்).படிக்கும்போதே இதை தான் சொல்கிறார்கள் என புரியும் வகையில் மொழி பெயர்ப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும், கருத்திடுகை அல்லது பதில்மொழியிடுகை என் கண்டுபிடிப்பு (ஆ அய்யோ அம்மா தமிழன்னை அடிக்கிறாள்).

அதே நேரம் அப்படியே ஆங்கிலம் - தமிழ் மாற்றவும் கூடாது. “யூத் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க நினைத்து இயக்குனர் ‘இளமை’ என்று வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆ... விஜய் ஜோடி யாரு ஷகீலாவா? என்று கேட்டிருப்பார்கள்” என்பார் என் நண்பர்.

உலகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டும்

சுமார் ஒரு மாத காலமாக நினைத்துக்கொண்டு (மட்டும்) இருந்த யோசனை (ஐடியா) ப்ளாக்கர்
வலைப்பூக்களுக்கு வகைப்படுத்துதல் (கேட்டகரைஸ் ) தரப்பட வேண்டும் என்பது.அதாவது நாம் எழுதும் பதிவுகளை நம் வலைப்பூவுக்குள்ளேயே அறிவியல் , கவிதை என வகைப்படுத்தும் வசதி, இதை ஒன்று ப்ளாக்கருக்கு ஒரு கடிதம் ,பலிக்கவில்லையென்றால் பல ஸ்கிரிப்ட்களை கலந்து புது ஸ்க்ரிப்ட் , இல்லையென்றால் நண்பர்களுடன் சேர்ந்து எப்படியாவது நாமே பண்ண வேண்டும் என எண்ணியிருந்தேன். நேற்று பார்த்தேன் இவ்வசதி தர ஒரு தளம் முளைத்து விட்டது.(ஆனால் இப்போது உறுப்பினராக இயலாது என்று சொல்லி விட்டார்கள்).யாரும் என்னடா இது இனிய தளத்தில் சொல்ல வேண்டியதை இங்கே சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் (உறுப்பினராகும் வசதி வரும்போது அங்கேயும் சொல்வேன் ) பாருங்களேன் அந்தக்காலம் போல் இல்லை நாம் நினைக்கும்போதே யாரோ செயல்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள் (அந்த தளம் பீட்டாவில் இருக்கிறது).அப்போதெல்லாம் அடுப்பில் காயும்போது தட்டு தூக்கியெறிந்ததைப் பார்த்து விட்டு நீராவி ரயில் எஞ்சினை ஒரு விஞ்ஞானி (ஸாரி பெயர் மறந்து விட்டது) கண்டுபிடித்ததாக அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன், அதாவது அவர் கண்டுபிடிக்க முயன்ற இடைவெளியில் யாருக்குமே அது தோன்றவில்லை. அவசரப்பட வேண்டாம் என்னை அந்த ரேஞ்சுக்கு ஒப்பிடவில்லை பொதுவாக சொல்கிறேன் .

நேற்று ரயிலில் பேச்சு முசுவில் கிண்டி வந்தது தெரியாமல் இறங்க இரு நிமிடங்கள் தான் தாமதித்து இருப்பேன். அடுத்து ஏற வந்தவர்கள் சர சரவென உள்ளே வர நடுவில் மாட்டி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அதில் பாருங்கள் கிண்டியிலிருந்து வேளச்சேரிக்கு ஏகப்பட்ட பேருந்துகள், ஆனால் மவுண்ட்டிலிருந்து ஒன்று கூட கிடையாது. காலம் இதை விட வேகமானது அறிவை விட முயற்சியை தான் அது மதிக்கும்.

என் நண்பனின் அப்பா சொல்வார் (அவருடையதா என்றறியேன் ஆனால் சோம்பேறித்தனம் வந்தால் இதை தான் நினைப்பேன்)
“எப்போதும் வாழ்க்கைக்கு வாய்ப்பு தராதே, நீயாகவே வளைந்து விடு, கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு ஓய்வாக இருந்தால் அப்புறம் வாழ்க்கை வளைக்கும் எப்போதுமே வாழ்க்கை வளைத்தால் ரொம்ப வலிக்கும்”

Tuesday, March 14, 2006

நீங்கள் வலைஞரா

கீழ்கண்டவற்றில் அதிகபட்சமாக “ஆமாம், உண்மை” என்பவராக இருந்தால் நீங்கள் இணைய பைத்தியமாக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன
1. வைரஸ் இருவகைப்படும்
2. யாஹூ என்பது எப்போதாவது அதீத சந்தோஷத்தில் உபயோகிக்கும் வார்த்தை அல்ல
3. RSS என்று ஒரு கட்சி இருப்பது உங்களைப் பொறுத்தவரை ஆச்சர்யமான கோ-இன்சிடென்ஸ் 4. கூகிள் என்றால் தேடுவது என்று தான் டிக்ஷனரியில் போட்டிருக்கும் என்று நம்புகிறீர்கள்
5. இப்போதிருக்கும் வேலையை விடாதிருப்பதற்கு இன்டர்நெட்டும் முக்கிய காரணம்
6. மெயில் ஐ.டி இல்லாத இளைஞன் இளைஞனா?
7. ஆடியோ சிடி வாங்கியதே இல்லை
8. வியாதிக்கு டாக்டரிடம் போவதற்கு முன் மெடிக்கல் சைட்களை ஒரு முறை பார்ப்பீர்கள்.
9. ஆங்கிலத்தில் கூட karuwAnidhi என்று எழுதுவீர்கள்
10. பேனாவை ரூமில் தேடிய போது ctrl + F இருந்தால் வசதி என்று யோசித்திருப்பீர்கள்

Monday, March 13, 2006

கேள்வியின் விலை


நேற்று ஏர்செல் ரீசார்ஜ் பேக் வாங்கப்போயிருந்தேன், அப்போதுதான் ஒருவர் 330 ரூபாய் கார்டு வாங்கினார்.அவர் போன பிறகு நான் “ஸ்கீம் ஏதாவது இருக்கிறதா?” என்றேன்.“200 ரூபா கார்டு இருக்கு சார் 50 ரூபா வேலிடிட்டி” “என்னப்பா சொல்ற 110 ரூபா கார்டுக்கே 75 ரூபா வேலிடிட்டி இருக்கே” “ஹி ஹி ஆமா சார்” முறைத்தேன்,”சரி வேறென்ன ஸ்கீம் இருக்கு” “300 ரூ கார்டு 272 ரூபா வேலிடிட்டி” “இப்ப தானே ஒருத்தர் 330 ரூ வாங்கிட்டு போறார் எப்படி வெச்சாலும் 300 ரூ கார்டு பெட்டராச்சே ஏன் குடுக்கல?” சிம்பிளா சொன்னான் “அவர் கேக்கலை” அவருடைய ஒரு கேள்விக்கு மதிப்பு 50 ரூபாய், நாம் இப்படி எதையுமே கேட்பதில்லை, சோம்பேறித்தனமோ, கூச்சமோ கேட்பதேயில்லை.கேட்காமலும் கிடைக்கும் ஆனால் கிடைத்தது நிச்சயம் பெட்டர் சாய்ஸ் ஆக இருக்காது, அதனால் எப்போதும் விசாரிப்போம், வெட்கப்படாமல் கேட்போம், யாருக்குத் தெரியும் ... சில கேள்விகள் 50 ரூபாயை விட பல மடங்கு விலை மதிப்புள்ளவையாக இருக்கலாம்

Sunday, March 12, 2006

வல்லவனுக்கு வல்லவன்



என்னது தனுஷோட அடுத்த படமா...? இல்லைங்க நான் சொன்னது சவுத் ஆப்ரிக்காவப்பத்தி. நாங்க தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்ல 400 ரன் அடிக்கறவங்களா இருப்போம்னு ரொம்ப நாளாவே சொல்லிக்கிட்டிருந்தது ஆஸ்திரேலியா, ஆனா அது இப்படி அமையும்னு அவங்களே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.ரெண்டு டீமும் சேந்து 872 ரன் அடிச்சிருக்கு ஒரே நாள்ல ஏதோ கஞ்சா போட்டுட்டு ஆடினாப்ல அதுக்குன்னு இப்படியா வெறி பிடிச்சு ஆட்றது.அதுவும் கடைசியா ஒரு பால் மிச்சம் இருக்கவே, இனி பவுலர்களுக்கு கஷ்ட காலந்தான்.அம்பயர் ஏன்டா வந்தோம்னு நினைச்சிருப்பார் அப்புறம், மத்த மேட்சில எல்லாம் நின்னா போதும் இந்த மேட்சில ரெண்டு கையயும் தூக்கிட்டு இல்ல நின்னிருப்பாரு.முதல்ல ரிக்கி பான்டிங் 160 ரன் 105 பாலுக்கு. நம்மூர்ல கேப்டன் பதவி வந்ததால நல்லா ஆட முடியல சுமை அதிகமாயிடிச்சின்னு கேப்டனாகிறவங்க எல்லாரும் (டிராவிட் உட்பட) சொல்றாங்க பான்டிங் என்னடான்னா வெளுக்கறாரு நம்ம கூட வேர்ல்ட் கப் ஃபைனல் ஆடின மாதிரியே தான் அங்கயும் ஆடியிருக்கார்.ஸ்கோரை பாத்து இந்திய அணி அன்னைக்கு மலைச்சு உக்காந்திருச்சு அது தப்பு துணிஞ்சிருக்கணும்னு சவுத் ஆப்ரிக்கா இன்னைக்கு நிரூபிச்சிருச்சு.ஆஸ்திரேலியாவ ஜெயிக்க முயற்சி பண்ற தகுதி இந்திய அணிக்கு தான் உண்டுன்னு எல்லாரும் நம்பினாங்க.ஆஸ்திரேலியாவ இப்ப ஈரத்துணி கட்டி ஓரமா உக்கார வச்சிருச்சு சவுத் ஆப்ரிக்கா.எல்லா தகுதி இருந்தும் ஒவ்வொரு தடவையும் வேர்ல்ட் கப் மிஸ்ஸாகிட்டு வந்த டீம் அது இந்த தடவையும் அப்படி நடக்கும்னு எனக்கு தோணலை

Saturday, March 11, 2006

நடிகர் முரளிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை

சந்தோஷமான அறிவிப்பு நான் விரும்பியதும் எதிர்பார்த்ததுமான எம்.பி.ஏ கனவு பலித்து விட்டது.மறுபடியும் ஸ்டூடண்ட் ஆகப்போகிறேண்.பாண்டிச்சேரி யூனிவர்சிட்டியில் திங்கட்கிழமை நடந்த மானாங்கன்னியான இன்டர்வியூவில் மிகுந்த போட்டிக்கிடையில் எப்படியோ (!?) என்னை செலெக்ட் செய்து விட்டார்கள்.விரைவில் மீண்டும் கல்லூரி மாணவனாக வலம் வரப் போகிறேன்.இது டபுள் பொனான்சா எப்படி என்கிறீர்களா? படிக்கப்போவது பாண்டிச்சேரியில் ஆயிற்றே

Thursday, March 09, 2006

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்


இன்று காலையில் வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். நூறடி ரோடு அம்மன் கோவில் அருகே ஒரு வற்றாத ஜீவ குட்டை உண்டு.என் கெட்ட நேரம் ஏதோ சிந்தனையோடு ரோடு தாண்ட அங்கே நிற்க கடன் கேட்டவன் துரத்துவது மாதிரி வெறி பிடித்த வேங்கையாக தேங்கிய தண்ணீரை தெறிக்க விட்டு பறந்தான் ஒரு பஸ் ட்ரைவர்.உடனே முகுளமோ தண்டுவடமோ செயல்பட சட்டென்று திரும்பி நின்றேன். நல்ல வேளையாக முதுகு வரை சேறு எகிறவில்லை, கெட்ட வேளையாக முழங்காலுக்கு கீழே பேண்ட் நாஸ்தி.எனக்கு ‘சுர்’ரென்று கோபம் ஏறியது.எவ்வளவு அழகான காலைப் பொழுது, இப்படி டென்ஷன் ஏற்றி விட்டானே, சரி அவனுக்கு என்ன டென்ஷனோ வீட்டில் மனைவி திட்டோ, வேலை பிடிக்கவில்லையோ அப்படியானால் ஒரு வேளை அவனுடைய டென்ஷனை நான் வாங்கிக் கொண்டேனோ ஆமாம் ஒரு வகையில் உண்மை தானே ஆஹா காலையில் நிதானமாக இருந்தால் எவ்வளவு தத்துவங்கள் கொட்டுகின்றன? ஆகவே எதற்காக மற்றவர்களின் டென்ஷன்களை நாம் வாங்கி கஷ்டப்பட வேண்டும் அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்முடைய டென்ஷனை மட்டும் நாம் வைத்துக்கொள்வோம்.

இன்னொரு தொல்லை ஆரம்பம்

சில நாட்கள் ஆப்ஸென்ட் ஆனதற்கு மன்னிக்கவும்.இனிய தளம் என்று இன்னொரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் (’அய்யய்யோ’ கேட்கிறது).என்ன செய்ய? பூக்காடு மொழி பெயர்ப்பு தளம் ஆகிவிட்டதோ என்கிற மாதிரி வரிசையாக சில பதிப்புகள், மற்ற நல்ல ஆங்கில தளங்களின் கருத்துகளை எழுதியிருந்தேன்.தினமும் நிறைய புது தளங்களை பார்ப்பதால் அதை சொல்ல வேண்டும் என்ற வேட்கை எழுவது இயற்கையே எனினும் பூக்காட்டில் சொந்தமாக ஏதாவது யோசித்து எழுதுவோமே என்று இணையத்தில் என்னைக் கவர்ந்தவற்றை இங்கே தொகுக்கிறேன்.

Wednesday, March 01, 2006

பழமொழிகளை அனுபவிக்கணும்

சிறு வயதில் பட்டி மன்றங்கள் அதிகம் பார்ப்பேன், அதில் பெரும்பாலும் தமிழ் பற்றி அவர்கள் சொல்லும் உவமைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.அதே போல் பழமொழிகளுக்கு புது விளக்கம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு “பந்திக்கு முந்து படைக்கு பிந்து” என்பதற்கு கேள்விப்பட்ட புது விளக்கம் நம் கை சாப்பிடும்போது முன்னால் வரும் அது தான் பந்திக்கு முந்து, அதே போல் போரில் ஈட்டியை எறியும்போது கை பின்னால் போகும் இது தான் படைக்குப் பிந்து என்பது அதாவது கை பின்னால் போகிறது என்பது என்று கேள்விப்பட்டேன். இதே மாதிரி “சட்டியில் இருந்தா ஆப்பைக்கு வரும்” சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் அகப்பை (கருப்பை) யில் கரு வரும் என்பதே உண்மையான பொருள் என்று சொன்னார்கள்.இதெல்லாம் தான் உண்மையா இல்லை சில பலரின் கிரியேட்டிவிடியா ஒன்றும் புரியவில்லை.கமல் ஒரு படத்தில் சொன்னது போல் பழமொழிகளை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.

Monday, February 27, 2006

கூகிள் ரெஃபெர்ரல்

கூகிள் ரெஃபெர்ரல் ப்ரோக்ராமில் இதற்கு முன் நேரக்கெடு எதுவும் இல்லை, சுமார் ஒரு மாதம் முன்பு ரகசியமாக 90 நாட்களுக்குள் நம்மால் ரெஃபர் செய்யப்படுபவர் 100 $ க்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற விதி கொண்டு வந்தது.இப்போது அக்கால அளவை 180 நாளாக நீட்டித்துள்ளது.எனக்கென்னவோ புதிதாக பயன்படுத்துபவர்கள் டெஸ்ட் செய்யவே இவ்வளவு காலம் ஆகி விடும், பேசாமல் ரெஃபர்ரல் பட்டனை எடுத்து விடலாமா என யோசிக்கிறேன் மேலும் விவரங்களுக்கு க்ளிக்

Saturday, February 25, 2006

பால்யமென்னும் நிழல்

குழந்தைப்பிராயத்தின் நினைவுகள் முதல் காதலை விடவும் இனிமையானவை.காட்டு மலர்ச்செடி போல மனதின் ஏதோ ஒரு மூலையில் அது தினமும் பூக்கிறது.நாம் அப்பிரதேசத்துக்குள் என்றாவது தான் நுழைகிறோம் அதுவும் நேரமில்லாத பயணி போல.

சிறு வயதில் புளியாங்காய் அடித்து உப்பு தொட்டு சாப்பிடும் போது ஒரு மிகப்புதிய புளிப்பு நாக்கில் உரசும், அதன் சுவை தாளாது சட்டென வெளியில் எடுத்து விடுவோம்.ஆனால் அதன் ருசி இப்போது வரை புளிப்பாக அடிநாக்கில் ஒட்டிக்கொண்டு தானிருக்கிறது.அதிலும் பாதிப்பழம், பாதிக்காயாக ஒரு பருவம் உண்டு அதை பூப்பழம் என்போம் ( நிறைய பெயர்கள் உண்டு).அது கிடைப்பதும் அரிது ஆனால் சுவை வர்ணிக்க இயலாதது.

ஈவில் டெட் படம் ரிலீஸ் ஆகும்போது பல கதைகள் உலவும், தனியாகப்பார்த்தால் கோடி ரூபாய் பரிசு பிரிவியூ பார்த்த போது டைரக்டரே செத்து விட்டார் ஒரே ஒருவன் தனியாக பார்த்து வெளியே வந்தான் அவனும் அன்று இரவு தூங்கும்போது ரத்தம் கக்கி செத்து விட்டான் அந்த படத்தை தனியாக பார்க்கும்போது சீட்டுக்கடியில் ஸ்பீக்கர் வைத்திருப்பார்கள் என்று பல கதைகள் உலவும்.அதிலும் ஆசை சாக்லேட் பேப்பரை அதிக தூரம் இழுத்தால் பரிசு என்று நம்பி வாங்கி வாங்கி அவசியமாக கவனமாக இழுத்துக்கொண்டிருப்போம், இவையெல்லாமே குழந்தைகளின் நேரத்தை கழிக்க குழந்தைகளாலேயே உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்.

எனக்கு சிறு வயதில் முக்கிய வேலையே என் எல்லா பிராப்பர்டியையும் பாதுகாப்பது தான்.ஆனாலும் சரியாக கிளம்பும் நேரத்தில் பேனா, ரப்பர், காம்பஸ் ஏதாவது காணாமல் போகும், அரை மணி நேரம் தேடியும் கிடைக்காது, சாயங்காலம் வீட்டுக்கு வந்தால் கண் முன்னாலேயே சமர்த்தாக உட்கார்ந்திருக்கும்.நான் ஏதோ ஒரு குட்டிச்சாத்தான் தான் அவைகளை தன் மாய உலகுக்கு எடுத்துப்போய் விட்டு திரும்ப வைத்து விடுவதாக நம்பினேன்.

தூர்தர்ஷன் தான் கதி என்றிருந்த காலத்தில் ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை படம் இவை தான் பொழுது போக்கு.ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னை படம் பார்க்க பக்கத்து தெருவுக்கு கூட்டிப்போனார்கள். ‘அலி பாபாவும் நாற்பது திருடர்களும்’ எம்ஜிஆர் அண்ணன் குகைக்குள் மாட்டிக்கொண்ட வேளையில் விளம்பரம் போட்டு படத்தை முடித்து விட்டார்கள்.டிவியை ஆஃப் பண்ணி வெளியே அனுப்பி விட்டார்கள்.எனக்கு அதற்கப்புறம் என்னாகும் என்ற சஸ்பென் ஸ் தாள முடியவில்லை, ஆனால் அதற்கு மேல் படம் போட மாட்டார்கள் என்று எனக்கு புரிய வைக்க முயற்சித்தார்கள் ‘அது திரை மலர்’ என்று.நான் வெளியே அனுப்பத்தான் இப்படி சதி செய்கிறார்கள் என்று ரொம்ப நாள் நம்பினேன்.

சமீபத்தில் திருப்பதி போயிருந்தோம்,அங்கே லட்டு வாங்குமிடத்தில் எடுத்துப்போக பை நாமே தான் எடுத்து வர வேண்டும்.வெளியே பாலிதீன் கவர் விற்பார்கள் ஆதலால் லட்டு வாங்கி வெளியே வந்தோம் வேக வேகமாக ஒரு சிறுமி வந்து விற்றாள் அவளிடம் எவ்வளவு என்று கேட்டதற்கு ஒரு கவர் இரண்டு ரூபாய் என்றாள், எங்களுக்கு இரு கவர் தேவை ஆனால் இரண்டு ரூபாய் தான் உள்ளது (திருப்பதியில் சில்லரை கிடைப்பது கடினம், ஒருவேளை எல்லாம் உண்டியலில் போய் விடுகிறதோ என்னவோ) அவள் ஒப்புக்கொள்ளவேயில்லை.எங்கள் குடும்ப நண்பர் அச்சிறுமி கன்னங்களில் கொஞ்சுவது போல் கை வைத்து “என்னடா கண்ணா ரெண்டு ரூபாய்க்கு ரெண்டு தரக்கூடாதா”.என்றார்.அவ்வள்வு தான் அவள் உருகி விட்டாள், லேசாக சாய்ந்தாற்போல் நின்று அழகான புன்னகையோடு "“ஃப்ரீயாவே எடுத்துக்கங்க” என்றாள்.”பரவாயில்ல” என்று காசு கொடுத்து விட்டு நடந்தோம்.

கடைசியாக திரும்பி பார்த்தேன் அவள் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ’டாடா’ காட்டினேன் அவளும் ‘டாடா’ காட்டினாள் அப்போது தான் கவனித்தேன் அவள் கண்கள் லேசாகப் பனித்திருந்தன.எனக்கு அப்போது தான் சுரீர் என உறைத்தது, ஒருவேளை இது போல் யாரும் அவளிடம் பேசியிருக்கவே மாட்டார்களோ? என் பால்யம் நிறைய கற்பனைக்கதைகளும், விளையாட்டுகளும் நிறைந்ததைப்ப் போல இவள் வாழ்க்கை பாலிதீன் கவர்களால் நிரப்பபட்டிருக்கிறதோ? அடுத்த முறை வரும்போது வெங்கடாஜலபதியை பார்க்கிறோமோ இல்லையோ லட்டு தருமிடத்தில் பாலிதீன் கவர் விற்கும் சென்னையை சேர்ந்த குமாரி என்கிற உதய குமாரியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.நீங்கள் கூட திருப்பதி போய் அவளைப்பார்க்க நேர்ந்தால் அவளை நான் கேட்டதாகச் சொல்லுங்கள் முடிந்தால்.

Thursday, February 23, 2006

ரஜினியின் அடுத்த மூவ் ||

விஜயகாந்த் ஏற்கனவே வந்தாயிற்று அரசியலுக்கு. திராவிட கட்சிகளுக்கு மாற்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிற தருணத்தில் “எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்” என்ற திறமையான வாதத்தை முன் வைக்கிறார்.ஆனால் அதைத் தவிர எதையும் பேச பயப்படுகிறார்.சில நேரங்களில் "பறவைக்காய்ச்சல் புரளி" என்று வித்தியாசமான பேட்டி கொடுப்பது சுப்ரமணிய சுவாமியை நினைவூட்டுகிறது.இரு திராவிட கட்சிகளின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி லட்டு மாதிரி மக்கள் மனதை அள்ள வேண்டிய நேரத்தில் தயங்கி தயங்கி வம்புக்கு இழுப்பது எதுவும் வேலைக்கு ஆகாது.ஆக இன்னும் ஐந்து வருடங்களில் ஒன்று விஜய காந்த் அரசியல் கற்றுக்கொள்வார் அல்லது ஒதுங்கி விடுவார்.கருணாநிதியும் ஓய்வு பெறும் நேரம் வந்து விடும்,திமுகவிலும் சரி அதிமுகவிலும் சரி அடுத்த கட்ட தலைவர்கள் உருவாக்கப்படவில்லை அல்லது உருவாக்கப்படுபவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

ஆக நேரம் கூடி வருகிறது என்பார்களே அப்படி ஒரு வாய்ப்பு ரஜினிக்கு அடுத்த ஐந்து வருடங்களில் நிகழலாம்.இமேஜை திரும்ப கொண்டு வர ஐந்து வருடங்கள் என்பது அளவுக்கு அதிக நேரம், நினைத்ததை விட அதிகமாகவே செய்யலாம்.அது மட்டுமன்றி ரஜினி என்றாலே கட்சிகள் எடுக்கும் முதல் பிரச்னை காவிரி நீர் தான் அதை சமாளிக்கவும் கடந்த காலத்தில் இதே பிரச்னையால் மக்களிடம் தனக்குள்ள கெட்ட பெயரை நீக்கவும் ரஜினி முயற்சிக்கலாம்.ஏன் திரும்ப ஒரு முறை அரசியல்வாதிகள் ரஜினியை வம்புக்கு இழுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதையே தனக்கு சாதகமாக மாற்றி அதிரடியாக ரஜினி பிரவேசிக்கலாம் அல்லது எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தது போல வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்கலாம்.

சமீப காலமாக ரஜினி இவ்வளவு சீக்கிரம் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டதில்லை சிவாஜி மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக? சந்திரமுகி வெற்றி ரஜினிக்கு முழு திருப்தி அளிக்காததாக இருக்கலாம். காரணம் அதன் வெற்றி ரஜினியால் மட்டுமே வரவில்லை.அந்தக்கதையின் பலமே ஜோதிகா கேரக்டர் தான். நூறாவது நாள் விழாவில் ஜோதிகா கலந்து கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக பத்திரிக்கைகளில் விமர்சிக்கப்பட்டதை நினைவில் கொள்க.ரஜினியின் இப்போதைய மிக முக்கிய நிலைப்பாடு பழைய இமேஜுக்கு வருவது அதற்கு வரப்போகும் வருடங்கள் சாட்சியாக அமையலாம்.

Wednesday, February 22, 2006

ரஜினியின் அடுத்த மூவ்

எல்லா பத்திரிக்கைகளும் ரஜினி இந்த தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்று யூகங்கள் வெளியிட ஆரம்பித்து விட்டன. எனக்கென்னவோ இந்த தேர்தலுக்கு ஓட்டு போடறத தவிர அவரு எதையும் பண்ண் மாட்டார்னு தோணுது (யாருக்கு போட்டார்னு சொல்லவும் மாட்டார்).அப்போ ரஜினி அரசியலுக்கு வரப்போறதில்லயா? அதான் இல்ல கண்டிப்பா அடுத்த தேர்தல்ல ரஜினிய எதிர்பாக்கலாம்.சரி ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி சொல்றேன்?

முதல்ல பாபாவுக்கு முன் ,பாபாவில், பாபாவுக்கு பின் அப்டின்னு இத பாப்போம் அதாவது பாபாவுக்கு முன்னே ரஜினியின் இமேஜ் அளவிட முடியாதது.கொஞ்சம் யோசிச்சு பாத்தீங்கன்னா பாட்ஷாவுக்கு முன்ன ஒரு ரெண்டு வருஷமாவே ரஜினி படங்கள் சுமாராவே ஓடிட்டிருந்தது... கோபப்பட வேண்டாம், 100 நாள் படங்கள் தான் ஆனாலும் சுமார் தான் நல்ல உதாரணம் உழைப்பாளி,அண்ணாமலை.அடுத்ததாவோ அதுக்கு முன்னாடியோ பாண்டியன் வந்தது (தேவர் மகனும் இந்த படமும் ஒண்ணா வந்தது ரஜினி, கமல் படங்கள் ஒண்ணா வந்து அதில கமல் படம் ஹிட் ஆனது இங்க மட்டும் தான்,மத்த எல்லா தடவையும் ரஜினி படங்கள் தான் ஹிட்).ஆனா பாட்ஷா இந்திய அளவில ரஜினிக்கு பேர் வாங்கி கொடுத்தது.அதுக்கப்புறம் (இன்னமும் அதிக) உயரம் போக ஆரம்பித்தார். ஜெயலலிதாவுடனான உரசலில் முதல் தடவையாக நேரடியாக அரசியலுக்கு வரவேண்டிய சூழ் நிலை.

அப்போது மட்டும் கட்சி ஆரம்பித்திருந்தால் ,முதல்வராகியிருக்க முடியும் என்று இப்போது வருத்தப்படும் ரசிகர்கள் உண்டு.ஆனால் அதை செய்யவில்லை. 'இன்னொரு முறை இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது' என்று பேட்டி மட்டும் தான் கொடுத்தார்.அந்த தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதற்கு ரஜினி முக்கிய காரணமானார். இது முதல் தவறு, ஆனாலும் தியரிடிகலாக ஸ்டடி ஆனார்.

அடுத்தது ‘முதல்வன்’ படத்தில் ஒப்புக்கொள்ளாமல் போனது.ரஜினிக்காகவே ஷங்கர் உருவாக்கிய படம் அது (அதன் இந்தி பதிப்பில் ஹீரோ பெயர் சிவாஜி ராவ் இதை வைத்து தான் பாலிவுட்டிலேயே விளம்பரம் செய்யப்பட்டது எப்படியும் அங்கு படம் ஓடவில்லை என்பது வேறு விஷயம்).இப்போது பாபாவுக்கு வருவோம்,அதிக எதிர்பார்ப்பு ரஜினியின் கடைசி படம் என்கிற புரளி (ஒருவேளை ஹிட் ஆகியிருந்தால் நிஜமாகியிருக்கலாம்) இப்போது வரை ரஜினியின் இமேஜ் ஏறுமுகம் தான்.இந்த இடத்தில் கேசட் ரிலீஸ் இதுவரை இல்லாத வகையில் தியேட்டர் டோக்கன் கொடுத்து வித்தியாசமாக தரப்பட்டது.லேசாக நடு நிலையாளர்க்ள் மத்தியில் அதிருப்தி ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் ரஜினி இல்லை.பாடல் வெளியீட்டுக்குப் பிறகு ஒரு பாடலில் பெரியார் பற்றிய சர்ச்சை எழுந்தது இது தான் இங்கு வந்த முதல் பிரச்னை.சினிமாப்படங்கள் மீது கேஸ் போடும் வழக்கம் இங்கிருந்து தான் ஆரம்பமானது. வழக்கம் போல இதை அஹிம்சையாகவே ரஜினி சமாளித்தார் ஒரு பத்திரிக்கையில் அப்போது ரஜினி செயல்பட்ட விதத்தை இப்படி பாராட்டியிருந்தார்கள்,” தற்காலிகப் புகழுக்காக இதை செய்தவர்களுக்கு ரஜினி சரியாக பதிலடி தந்து விட்டார்.படத்திலிருந்து எடுப்பதாக சொல்லி பிரச்னையை முடித்து விட்டார்.ஆனால் ஆடியோ கேசட்டுகளில் ஏற்கனவே பதிந்ததை எப்படி மாற்ற முடியும் எதிர்ப்பவர்களால்?”.

மலேசிய கலை விழாவில் "அடுத்தது நான் போகப்போகிற பாதை ஒன்று இருக்கிறது.ஆனால் அது அரசியல் இல்லை" சற்று நிறுத்தி விட்டு "இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்" என்றார்.பயங்கர க்ளாப்ஸ் ஆனால் அரசியல் டெஸ்ட் ஆரம்பித்தது.

ராமதாஸ் ரஜினிக்கு ஒரு டெஸ்ட் ஆக வந்தார்.ஒருவேளை ரஜினியின் அமைதியாக இருப்போமே என்கிற குணத்தை வைத்து முடிவெடுத்தாரோ என்னமோ எதிர்த்தார்.எதிர்க்க வேண்டுமே என்கிற மாதிரி ஒரு வாதம் ‘புகை பிடித்து எதிர்கால சந்ததிக்கு தவறான வழி காட்டுகிறார்’ (இதை எதிர்த்து இவர்களே இன்னமும் சட்டம் கொண்டு வரவில்லை / முடியவில்லை,இது ஏன் சப்பையான வாதம் என்று வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம்) ஆனால் ராமதாஸ் ஜெயித்தார் மிக முக்கிய காரணம் பாபா படக்கதை.சும்மா விட்டிருந்தாலே அந்தப்படம் ஓடியிருக்காது, ஏதோ அவர்களது பிரச்சாரத்தில் தான் ஓடாமல் போனது என்கிற மாதிரி தங்கள் இமேஜை உயர்த்திக்கொண்டார்கள்.சரியாக ரஜினி குழம்பியிருந்த நேரத்தில் காவிரிப்பிரச்னையை கையில் எடுத்தார்கள்.பிரச்னையை விட ரஜினி நிலைப்பாடு என்ன என்பதே அந்த வருடப்பிரச்னையின் முக்கிய நோக்கம் (இப்போது வரை காவிரிப்பிரச்னை இருக்கிறது) ஆனால் அந்த வருடம் தான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிதாக ஆரம்பித்தது.ரஜினி நெய்வேலிப்போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை.மொத்த தமிழகமும் வெறுப்படைகிற தர்மசங்கட சூழ்நிலை.முன்பு சொன்ன ரஜினியை ஆதரித்து பேசிய தினசரியே 'கன்னடத்தை விட்டுக்கொடுக்க முடியவில்லை' என்று விமர்சித்தது, கலைக்கப்படும் ரசிகர் மன்றங்களை படம் பிடித்துப்போட்டது. தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ரஜினி இங்கே ஜெயித்தார்.மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்தார்,பல கட்சித்தலைவர்கள், கட்சி சார் நடிகர்கள் எல்லோரும் பங்கேற்றார்கள். சில நாட்களில் 'ஜக்கு பாய்' அறிவிப்பு வெளியிட்டார்."இறைவா நண்பர்களிடமிருந்து காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்ற கேப்ஷன் பெரிதாகப்பேசப்பட்டது.தேர்தலில் அதிமுகவுக்கு சப்போர்ட் பண்ணினார்.அனைவரும் அறிந்த கடைசி தவறான முடிவு.வரலாற்றுத்தோல்வி. இப்போதுவரை தான் குழப்பங்கள்.சட்டென்று காட்சிகள் மாற்றினார்.பழைய குரூப்பை ஒதுக்கினார், முற்றிலும் எதிர்பாராத காம்பினேஷனில் 'சந்திரமுகி'. (டைட்டிலில் கூட ஹீரோயிஸம் இல்லை) சொன்னபடி மிகப்பெரிய வெற்றி.தான் வசூலில் இன்னமும் சூப்பர் ஸ்டார் தான் என்று இன்னொரு முறை நிரூபித்தார் (கூட கமல் படம் ஒன்று வந்தது அதன் பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்?).அடுத்த மூன்றாவது வாரங்களில் இரு முன்னணி வார இதழ்களில் தொடர் கட்டுரைகள் , பார்க்காத புகைப்படங்கள்.படம் 100 நாள் ஓடுமுன்பே அடுத்த படம் பற்றிய பேச்சு வர ஆரம்பித்தது.அதே போல 'சிவாஜி' அறிவிப்பு.இவைதான் இதுவரை நடந்தவை.சரி அடுத்து என்ன நிகழும்? உண்மையிலேயே சினிமா போதும் என விரும்பினால் சில பல நிகழ்ச்சிகளை ஏன் நடத்தினார்? நாளை சொல்கிறேன்

Friday, February 17, 2006

என் கேள்விக்கென்ன பதில்?

எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் ஹாய் மதனில் கேட்க நினைப்பேன். ஆனால் சோம்பேறித்தனத்தால் அது என் மூளையில் சுமையாகவே தேங்கி கிடக்கிறது.உங்களுக்கு தெரிந்தால் விடை சொல்லுங்களேன்?

தமிழ் தான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்றும் தெலுங்கு,கன்னடம் & மலையாளம் ஆகியவற்றின் தாய் என்றும் சொல்கிறோம்.தெலுங்கு,மலையாள நண்பர்களிடம் பேசும்போது தெரிந்தது,அவர்களும் அவர்களது தாய்மொழியே பழமையானது மற்றும் அவற்றிலிருந்தே மற்ற மொழிகள் (தமிழும்) வந்ததாக கூறுகிறார்கள்.எது உண்மை?

Thursday, February 16, 2006

இலக்கணம்

எல்லோரிடமும் சொல்லியிருந்தேன்
கல்லூரியில் படித்த போது
எனக்கொரு தோழி இருந்தாள்
என்னை ஊக்குவித்த தேவதை
தோல்விகளில் கை கொடுத்தவள்
முயற்சிகளுக்கு உருவம் கொடுத்தவள்
நம்பிக்கைக்கு உயிர் க்டுத்தவள்
அந்த நல்ல நாளில் அறிமுகப்படுத்தினேன்
எல்லோர் முகத்திலும் ஏமாற்றம்
அப்புறம் தான் புரிந்தது...
அவர்களைப் பொறுத்தவரை,
'தேவதை என்பவள்
அழகாக இருப்பாள்!'

Wednesday, February 15, 2006

கடுப்பு கனவு இம்சை இரவு

இரவு மணி 10:30
காத்து கருப்பு சீரியல் பார்த்தால் காலை லேட்டாகும். ‘சுர்ர்ர்’ ஆ.. ஏதோ கடித்து விட்டது, மேல் தொடையில் உடனடி தடிப்பு.பயமாத்தான் இருக்கு ம்ச்ச் காலைல பாத்துக்கலாம்.

11 மணி
தூங்க ஆரம்பிக்கிறேன்.ஒருவேளை ஸ்பைடர் மேன் படத்தில வர்ற மாதிரி சிலந்தி கடிச்சிருந்தா...அய்யா பஸ்ல போற தொல்லையே இல்ல செலவும் மிச்சம் ஆனா சீக்கிரம் வீடு மாறிடணும், இந்த பக்கம் தான் மாடியே இல்லயே அப்புறம் எங்கே தாவுறது?....தூங்கி விட்டேன்.

12:30

கைகளில் கொத்தாக வலி, தேய்த்து விடலாமென்றால் தூக்க முடியவில்லை...இரண்டு கைகளையுமே லேசாக அசைக்க முயற்சி செய்தேன் பூச்சிகள் விறுவிறுவென்று ஏறுவது போல இருந்தது...ஆபத்து லைட்டை போடு முழுதும் இருட்டு யாரையாவது கூப்பிடு “அம்மா... லைட்டப்போடு” பலனில்லை வலி சுர்ர்ரென்றது கத்த ஆரம்பித்தேன்... " ர்ர்ர் ர்ரா ஆ ஆஆ ஆஆஆஆஆ".இடையில் நண்பன் குரல்,”டேய் ஏன்டா கத்துற...வேஷ்டிய ஒழுங்கா கட்டுறா லைட்ட போட்றேன்”.சரேலென வெளிச்சம்....இது வீடில்லை ரூம்.கைகளில் வலி...? வலியில்லை கண்ட மேனிக்கு படுத்ததில் மரத்துப்போய் விட்டது.பக்கத்து வீட்டு கணவன் மனைவி கதவைத்தட்டினார்கள் நண்பன்,“ஹி ஹி ஒண்ணுமில்ல தூக்கத்தில உள்றிட்டான்”.மனைவி,”இப்படியா அதுக்கு கத்துவாங்க?” கணவன்,”ஏதாவது உருவம் ஜன்னல் வழியா பாத்தாப்லயா?” (அவருக்கு ரொம்ப நாளாகவே திருடர் சந்தேகம்)

காலை 5:45

“ நாதாரி நைட் வேற காத்து கருப்பு பாத்தேன்.இவன் கத்தின கத்துல நான் அரண்டுட்டேன்". நண்பனின் புலம்பலில் எழுந்தேன் அப்புறமென்ன கொஞ்சம் வழிந்து விட்டு எங்களுக்கு வந்த வித்தியாசமான கனவுகளைப்பற்றி பேசி விட்டு கிளம்பி விட்டேன்.சரி இதே போல உங்களுக்கு வந்த அல்லது பயமுறுத்திய கனவுகளைப்பற்றி கமென்ட்டில் பகிருங்களேன்.

Tuesday, February 14, 2006

உங்களுக்கு தள்ளிப்போடும் குணமுள்ளதா?

ஆங்கிலத்தில் ப்ரோக்ராஸ்டினேஷன் எனப்படும் இந்த தள்ளிப்போடும் பழக்கம் தான் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பின்வரும் கேள்விகளுக்கு நெகடிவ் பதில் சொல்கிறீர்களா என செக் செய்து கொள்ளவும்:
கடைசி பத்து டெட்லைன் சம்பந்தபட்ட விஷயங்களை எப்போது முடித்தீர்கள்? அல்லது எத்தனை முடிக்காமல் விட்டீர்கள்? அதாவது தீபாவளீக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு துணியெடுப்பது, கரென்ட் பில், டெலெபோன் பில் அபராதத்துடன் கட்டுவது மாதிரி.

ஒருவேளை நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் பார்ட்டிகளில் உங்களோடு இருக்கும் எல்லோரையும் விட அதிகமாக குடித்தீர்களா? இல்லையென்றால் அப்படி யார் குடித்தார்களோ அவர்களுடன் கவனமாக பழகவும்.ஏனென்றால் இந்த பழக்கம் உள்ளவர்கள் அதிகம் குடிப்பார்கள் என்று சைக்கலாஜிகல் டுடே பத்திரிக்கை கூறுகிறது.

”இன்றை விட நாளை இந்த வேலையை நன்றாக செய்வேன்” “இது முக்கியமானதல்ல” என்பது போன்ற வரிகளை உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டா என கவனியுங்கள். அதே போல் “ நான் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படுவேன்” என கூறுபவரா? (இன்டர்வியூவில் இதை பிளஸ் பாயின்டாக சொல்வதை தவிர்ப்பது நலம்.)

இரண்டிலிருந்து நான்கு வருடங்களாக மிகப்பெரிய மாற்றம் எதையும் சந்திக்கவில்லையா? எவ்வளவு வேலை இருந்தாலும் மெயில் ஒன்று வந்தால் பார்த்து விட்டு தான் மறுவேலை.

இவற்றில் எந்த கேள்விக்கு ஆமாம் என்று சொல்லியிருந்தாலும் எச்சரிக்கை...தள்ளிப்போடும் பழக்கம் தான் வெற்றியை தவிர்க்க மிக சுலபமான வழி

Friday, February 10, 2006

காதலில்

உன் முத்தங்களை நிரப்ப என் கன்னக்குழி
உனக்குப் போதுமானதாயிருந்தது
ஒரு குழந்தையுடனானதை
ஒத்திருந்தது உன் ஸ்னேகம்
கவிஞனின் கண்களுக்கு கிடைத்த மஞ்சள் நிலவைப்போல
என் காதல் சரியாக உன்னிடம் சேர்ந்திருக்கிறது
துருப்பிடித்த இரும்பின் மரப்பலகை முத்தங்களாய்
காமத்தைப் பதிக்கிறாய்
ஏழைத்தாயின் அழுக்குச்சேலை தான்
அக்குழந்தைக்கு அற்புத வாசம்
ரயில் பயணத்து அதிர்வுகள் போல - உன்
சிறுு குறைகளும் எனக்கு சுகம் தான்

Wednesday, January 18, 2006

என்னாத்த சொல்வேனுங்கோவ்

நேற்று லேட்டாக விகடன் படித்தேன் சுஜாதா கற்றதும்பெற்றதும் முடித்து விட்டார்(இப்போதைக்கு).நிறைய அறிவியல்பூர்வமான விஷயங்கள், சர்ச்சைகள், லைட்டாக பந்தா ஆனால் எல்லாமே ரசிக்கக்கூடியதாய்.

அப்புறம் கருவாச்சி காவியம், வைரமுத்து எழுதியது ரசிக்க முடிகிறது.சகஜமாக அந்தரங்க உறுப்புகளைக்கூட வர்ணிக்கிறார்.ஆனால் நேற்று படித்ததில் அதில் வரும் ஆட்டுக்கு ஆண்மையழிக்கிற டாபிக்கில் ஏதோ மிருக வைத்தியர் ரேஞ்சுக்கு விளக்குகிறார்.எனக்கு குமட்டியது.முன்பு இதே எஃபெக்டில் பிரசவத்தை விளக்கினார்.பெண்கள் புளகாங்கிதப்பட்டு தனக்கே பிரசவம் பார்த்துக்கொண்ட மாதிரி இருந்தது என்று பாராட்டியிருந்தார்கள், ஸாரி நேற்று எனக்கும் அதே மாதிரியான ஒரு ஃபீல் தான்.

மதன் பதில்கள்,வழக்கம் போல் எல்லாமே அருமை.'காஸ்' பற்றி கேட்ட வாசகரை ஓவராகவே வாரி விட்டார்.

விஜயகாந்த் பேட்டி எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள், அரசியல்வாதியாக தேறுவார் போலத்தான் தெரிகிறது.ஆனால் இவரிடம் இப்படி வக்கனையாக கேள்வி கேட்பவர்கள் முக்கிய அரசியல் தலைகளிடமும் நாக்கை பிடுங்கும் கேள்வி கேட்டால் பத்திரிக்கை தர்மத்தை பாராட்டலாம்

Sunday, January 15, 2006

ஆஹா

ஆஹா இன்னாப்பா எதேச்சையா வந்து பாத்தா எல்லாமே மாறிக்கிடக்கு
திரும்ப மூணு போஸ்ட் இருந்தாதான் சேர்ப்பேன்னு தமிழ்மணம் அடம் பிடிக்குது நான் எங்கே போறது அதுக்குள்ள மூணு பதிவுக்கு அதான் ஒன்ன மூணாக்கிட்டேன் ஹி ஹி

ஹைக்கூ

அவள் என் தோழி
சுற்றிலும் அழகான தோழிகள்
----------------------------------
அவள் இடித்தவனை திட்டுகிறாள்
நிறைய பேர் தலை குனிகிறார்கள்

ஹைக்கூ

தமிழர் திருநாள்....?!@
ஹேப்பி பொங்கல்!
--------------------------------
நாம் காதலிக்க வேண்டாம்
உன் உள்ளாடை வெளியே தெரிகிறது
----------------------------------

Sunday, January 08, 2006

தமிழ் (சினிமாப்பாடல்)- ல ஒரு சந்தேகம்

தமிழ் - ல எனக்கு விருப்பம் அதிகம். ஆனா அறிவு அதிகமில்ல தான், இருந்தாலும் ரொம்ப நாளா எனக்குள்ள இலக்கணம் சம்பத்தப்பட்ட சந்தேகத்தை கேக்குறேன் .அதிலயும் இது ரொம்ப பிரபலமான இளம் கவிஞரோட பாடல்.சில பள்ளிகள்ல பிரேயர் நேரத்தில் கூட பாடப்பட்டது.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" அப்டின்னு ஆட்டோகிராஃப் படத்தில ஒரு பாட்டு வரும்.
ஒவ்வொரு என்பது பன்மையை குழுவை குறிக்கும் வார்த்தை தான் ஆனால் அதற்கடுத்த வார்த்தை பன்மையை குறிக்கக்கூடாது.

பூக்களுமே அப்படிங்கறது பன்மை இது வந்தா ஒண்ணு இதுக்கு முன்னாடி "ஒவ்வொரு" வராது,"எல்லா" தான் வரும். "ஒவ்வொரு" வந்தா பூவுமே, மாணவனுமே, மொழியுமே என ஒருமை தான் வரும் அதான் "சொல்கிறதே" .ஒண்ணு பாடல் "ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே"ன்னு வரும் இல்லையா "எல்லா பூக்களுமே சொல்கின்றனவே" -அப்டின்னு நினைக்கிறேன்.

குழப்பம் வந்தால் ஆங்கிலத்தில் ஒப்பீடு செய்து பாருங்களேன் Anyone is (not are) liable to fall ill,Every car has (not have) been tested

இலக்கணப்பிழை நடைமுறையில் சாதாரணமானதே ஆனால் கவிஞர்களுக்குமா?
கவிதைகள் அப்போதைக்கு ரசிக்கப்படுபவை என்பதல்லாமல் எதிர்கால சந்ததியும் படிக்கும் என்பதாலேயே கேட்டேன்.
எதிர்காலத்தில தமிழ் இருந்தாத்தானேங்கறீங்களா....